ரூ.1.18 கோடி வங்கி பணத்தை கொள்ளை அடித்த இசக்கிபாண்டியை 5 நாட்கள் காவலில் எடுத்தது போலீஸ்
பூந்தமல்லி: சென்னை அருகே வேலப்பன்சாவடியில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்பச் சென்ற ரூ.1.18 கோடி ரொக்கப் பணத்தை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆன கார் டிரைவர் இசக்கி பாண்டி இன்று திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி-திசையன்விளை ரோட்டில் உள்ள தொட்டிக்காரன்விளையை சேர்ந்த மந்திரத்தின் மகனான இசக்கிபாண்டி, கடந்த 3ம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட 1.18 கோடி பணத்தை அபேஸ் செய்துக் கொண்டு காரோடு எஸ்கேப் ஆனார்.'
சென்னையை அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப போன போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் தனிப்படைகள் அமைத்து இசக்கியை தேடி வந்தனர். அப்போது, இசக்கி பாண்டியின் குடும்பத்தினர் நாசரேத் அருகே உள்ள சடையன்கிணறு கிராமத்தில் வசிப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 6 ஆம் தேதி இசக்கிபாண்டி சரண் அடைந்தார். அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கவும், அக். 14ம் தேதி பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி, காரின் டிரைவர் இசக்கிப்பாண்டி இன்று திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூவிருந்தவல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, இசக்கியின் மைத்துனர் கனராஜிடம் இருந்து 72 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர்.