1800 கேள்விகளுக்கெல்லாம் பயந்தவர்களா நாங்கள்..கேட்ட கேள்விகள்தானே...: ஆ. ராசா 'அசால்ட்' பதில்
உதகமண்டலம்: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கே முட்டாள்தனமானது.. இப்போது கேட்க இருக்கும் 1800 கேள்விகள் ஏற்கெனவே நீதிமன்றத்தால் கேட்கப்பட்டவை தானே தவிர சொர்க்கத்தில் இருந்து ஒன்றும் புதிதாக வந்துவிடவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆ. ராசா கூறியுள்ளதாவது:
முட்டாள்களின் வழக்கு:
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை தொடர்பான ஒட்டுமொத்த வழக்கும் முட்டாள்தனமானது. இதைப் பார்த்து நானோ எனது கட்சியோ பயப்படவில்லை. நடுங்கவில்லை.
புதிய சவால் இல்லை:
1800 கேள்விகள் என்பது எனக்கு புதிய சவால் அல்ல. இவை சொர்க்கத்திலிரு்து வரவில்லை. இவை அதே விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கனவே நாங்கள் ஆஜரானபோது கேட்கப்பட்ட கேள்விகள்தான்.
நான் அப்பாவி
நான் அப்பாவி என்பதை எனது பதில்கள் மூலம் நிரூபிப்பேன். தமிழகத்திலும் சரி, நீலகிரியிலும் சரி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற பிரச்சினையே எடுபடவில்லை.
வெற்றி நிச்சயம்:
இரண்டாவது முறையாக நீலகிரி தொகுதியிலிருந்து நான் வெற்றி பெறுவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் 15 மாதம் சிறையில் அடைபட்டிருந்ததால் நீலகிரியில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை.
சிறையில் இருந்தப்பவே பிசிதான்..
சிறையில் நான் இருந்தபோது உடல் ரீதியாக நான் முடங்கியிருக்கலாம். ஆனால் நான் பலருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. நிறையப் பேருடன் தொழில்நுட்ப வசதிகள் மூலம் பேச முடிந்தது, மெசேஜ் அனுப்பமுடிந்தது.
இவ்வாறு ராசா கூறினார்.