"புள்ளய காப்பாத்துங்க".. ஆரணி அருகே பஸ் மோதி இறந்த சிறுவனின் தாய் கண்ணீர்.. பதற வைக்கும் வீடியோ
ஆரணி: ஆரணி அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது கண் இமைக்கும் நேரத்தில் தனியார் வாகனம் மோதிய விபத்தில் வாகன டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் சரணவன்- புஷ்பலதா தம்பதியினருக்கு விஷ்ணு (11) அர்ஷினி (8) என்ற மகனும் மகளும் உள்ளனர்.
நேற்று இரவு ஆரணி ஆற்காடு சாலையில் வீட்டின் அருகே உள்ள ஓட்டலில் டிபன் வாங்க விஷ்ணு தன்னுடைய சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இரும்பேடு கூட்ரோடு அருகில் செய்யாரிலிருந்து ஆரணி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த தனியார் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது மோதியது.
தனியார் பேருந்து
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் தனியார் பேருந்து டயரில் சிக்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆரணி தாலுக்கா போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கதறல்
மகனின் சடலத்தை கண்ட பெற்றோர்கள் கதறி அழுது மருத்துவரிடம் மகனுக்கு சிகிச்சை அளிக்க கெஞ்சி கதறி அழுதனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து தனியார் பேருந்தை பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவர் செல்வரசு என்பவரை தேடி வருகின்றனர்.
நெஞ்சு பதறுகிறது
நெஞ்சை பதற வைக்கும் சிறுவன் சைக்கிளில் சாலையை கடக்கும் காட்சி வெளியானது ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோவில் சிறுவன் சாலை சென்டர் மீடியனுக்கு ஓரமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது வேகமாக ஒரு பேருந்து வருகிறது. அந்த நேரம் சாலையை கடக்க சிறுவன் முற்படுகிறான்.
வீடியோ
திடீரென பிரேக் போடும் போது அந்த பேருந்து இடித்து விடுகிறது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியிருந்தன. நேற்று மாலை நேரத்தில் தனியார் பேருந்து மோதி இருசக்கரவாகனத்தில் வந்த 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.