ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வன்முறை... தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் 144 தடை நீடிப்பு
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து தூத்துக்குடியில் நேற்று பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் நேற்று வன்முறையாக மாறியதை அடுத்து தூத்துக்குடியில் நேற்று பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 3 மாதங்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று 100-ஆவது நாளையொட்டி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
அசம்பாவிதங்களை தடுக்க தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
துப்பாக்கிச் சூடு
அப்போது போலீஸார் நடத்திய தடியடிக்கு பொதுமக்கள் கல்வீச்சு நடத்தினர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் அடைந்தனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
25-ஆம் தேதி வரை
குறி வைத்து மார்பு, வாய் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. வரும் 25-ஆம் தேதி வரை 144 நீடிக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பேரணி, ஊர்வலம்
எனவே 25-ஆம் தேதி வரை வேம்பார் , குளத்தூர், தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய எல்லை பகுதி, ஆறுமுகமங்கலம், வேடநத்தம், எப்போதும் வென்றான், ஒட்டப்பிடாரம் ஆகியவற்றில் பேரணி, ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாள் கத்தி,
மேலும் 5 அல்லது அதற்கு மேல் மக்கள் கூட கூடாது. மிதிவண்டி, இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் பேரணியும் செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் வாள், கத்தி, கம்பு, அரசியல் கொடி, கற்கள், அபாயகரமான ஆயுதங்கள் கொண்டு செல்லக் கூடாது. தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்களை வாடகை வாகனங்களில் அழைத்து செல்லவும் கூடாது.