அத்திப்பட்டியாக மாறிய காந்தி கிராமம்... தண்ணீர் இல்லை.. பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை!
காந்தி கிராமம், திண்டுக்கல்: தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பிரபல காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்திற்கு 15 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இங்கு கடந்த சில நாட்களாகவே போதிய அளவில் குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் மாணவ, மாணவியர் குறிப்பாக விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து தற்போது 15 நாள் விடுமுறையை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
காந்தி பெயரில் பல்கலைக்கழகம்
திண்டுக்கல் அருகில் உள்ளது காந்தி கிராமம். இந்தி காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பலர் விடுதிகளில் தங்கிப் படிக்கிறார்கள்.
விடுதிகள் - பேராசிரியர் குடியிருப்புகள்
பல்கலைக்கழக வளாகத்திற்குள் விடுதிகளும், பேராசிரியர்களுக்கான குடியிருப்பும் உள்ளன. இங்கு தினசரி ஒன்றரை லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக மிகவும் குறைந்த அளவிலான தண்ணீரே கிடைக்கிறது.
800 மாணவிகள்
இங்குள்ள விடுதியில் 800 மாணவிகள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு காலையில் 3 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1 மணிநேரம் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
தண்ணீர் கோரி போராட்டம்
இதையடுத்து அவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு போராட்டத்தில் குதித்தனர். தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமமாக இருப்பதாகவும், தண்ணீர் தரும் வரை வகுப்புகளுக்கு வரப் போவதில்லை என்றும் மாணவிகள் அறிவித்தனர்.
ஊராட்சியிடம் பேச்சுவார்த்தை
இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை வகுப்புகளுக்கு விடுமுறை 15 நாட்கள் விடப்படுவதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்தார்.
மாணவிகள் அதிர்ச்சி
தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விட்ட செயல் மாணவிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருப்பினும் வேறு வழியில்லாமல் தற்போது அவர்கள் விடுதியிலிருந்து வெளியேறி தங்களது ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
சென்னையில் சனிக்கிழமை விடுமுறை
தலைநகர் சென்னையிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை சத்தமின்றி தலைவிரித்தாடி வருகிறது. புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக சனிக்கிழமை தோறும் சில பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு வருகிறார்கள். தண்ணீர் நிலைமை மேம்பட்டால்தான் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.