மினி பஸ்சில் இரட்டை இலை: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஜெ. வழக்கு - தனி நீதிபதி விசாரிக்க மறுப்பு!
சென்னை: தமிழக அரசின் மினி பேருந்தில் உள்ள இரட்டை இலை சின்னத்தை மறைக்க தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முதல்வர் ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரசு திட்டங்களில் இரட்டை இலை சின்னம் இடம் பெற்றுள்ளதாகக் கூறி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவிற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், சென்னையில் உள்ள மினி பேருந்துகளில் இடம் பெற்றுள்ள இலைகள் படத்தை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், மினி பேருந்தில் உள்ள இலைகள் படம் பசுமை, சுற்றுச்சூழலை குறிப்பதாகவும், இதனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு நீதிபதி ராஜேந்திரன் முன்பு வந்தது.
ஆனால் வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார் நீதிபதி ராஜேந்திரன். மாறாக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இதுகுறித்து விளக்கிய நீதிபதி, தேர்தல் தொடர்பான வழக்குகலை தானே விசாரிப்பதாக தற்காலிக தலைமை நீதிபதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். எனவே தலைமை நீதிபதி அமர்வுக்கு இதை மாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.