அட்சய திரிதியைக்கு 3200 கிலோ தங்கத்தை அள்ளிய தமிழக மக்கள்
தமிழகம் முழுவதும் அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு திங்கள், செவ்வாய்கிழமைகளில் மட்டும் 3200 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் "அட்சய திரிதியைக்கு எங்க கடைக்கு வந்து தங்கம் வாங்குங்க" என்று நகைக்கடைகள் கூவி கூவி அழைத்ததன் பலன் கிடைத்து விட்டது என்றே தெரிகிறது.
அட்சய திருதியை நாளான நேற்று, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக நேற்று அதிகாலையிலேயே நகைக் கடைகளை திறந்துவிட்டனர். நள்ளிரவு வரை நடந்த வியாபாரத்தில் 2000 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டதாம்.
விலை குறைந்த தங்கம்
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கவேண்டும் என்ற நம்பிக்கை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. இந்த வியாபாரத்தை முன்னிட்டு தங்கம் விலை அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டு தங்கம் விலை குறைந்திருந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,526 ஆகவும், ஒரு பவுன் ரூ.20,208 ஆகவும் இருந்தது.
அதிகரித்த ஆர்வம்
கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் ஒரு பவுன் ரூ.22,400-க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு பவுனுக்கு ரூ.2,200 வரை விலை குறைந்து இருந்ததால் நகை வாங்க மக்களிடம் ஆர்வம் அதிகமாக காணப்பட்டது. சென்னையில் அனைத்து நகைக்கடைகளிலும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து நகைகளை வாங்கிச் சென்றனர்.
2000 கிலோ விற்பனை
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆயிரத்து 600 கிலோ தங்க நகைகள் விற்பனையானது. இந்த ஆண்டு, 2 ஆயிரத்து 50 கிலோ விற்பனை ஆகியுள்ளது.
நகை வியாபாரிகள் மகிழ்ச்சி
தள்ளுபடி மற்றும் விலை குறைவு போன்ற காரணங்களால் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாக நகைக்கடை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும்
இந்திய அளவில் நேற்று மட்டும் 30 முதல் 35 டன் தங்கம் விற்பனை நடந்திருக்கும் எனவும் இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்றும் இந்திய ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி சங்கத்தின் முன்னாள் தலைவர் அசோல் மினாவாலா கூறினார்.
3200 கிலோ விற்பனை
தங்க நகை விற்பனை கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டே நாளில், சுமார் 3,200 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவர்ச்சி விளம்பரங்கள்
செய்கூலி இல்லை, சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி என கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு நகைக்கடைகள் வாடிக்கையாளர்களை ஈர்த்தன. கடந்த ஆண்டைவிட ஆபரணத்தங்கம் சவரனுக்கு 2,197 ரூபாய் குறைந்து சவரன் 20,344 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், திட்டமிட்ட அளவை விட மக்கள் கூடுதலாக நகைகளை வாங்கிச் சென்றனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் நகை விற்பனை 30 சதவிகிதம் அதிகரித்திருந்தது.
ஆண்டுக்காண்டு அதிகம்
2011 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாளில் 700 கிலோ தங்கம் விற்பனை ஆன நிலையில், 2012 ஆம் ஆண்டு அதன் விற்பனை 720 கிலோவாக அதிகரித்திருந்தது. 2013ஆம் ஆண்டில் 1,100 கிலோவும், 2014 ஆண்டு 1600 கிலோவும் தங்கம் விற்பனையானது.
சென்னையில் விற்பனை
தமிழகத்தில், நேற்று முன்தினம், 1,100 கிலோ, நேற்று, 2,100 கிலோ என இரண்டு நாட்களில் மட்டும், 3,200 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு, 1,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இரண்டு நாளில் சுமார் 2,800 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
|
ட்விட்டர் கருத்து என்ன?
தங்க நகை விற்பனையை ட்விட்டரில் பலவித கருத்துக்கள் உலா வருகின்றன.
"இன்னிக்கு 2000கிலோ மூளை வித்துருக்காமே.. அவனவன் எடுக்குற முடிவு ஜுவல்லரிகாரனுக்கு சாதகமாத்தான் இருக்கு! என்று குறிப்பிட்டுள்ளார் ஒரு வலைஞர்."
|
அட்சய திரிதியை ஹைகூ
வாடிக்கையாளரின் மனைவி மரணம்
வருத்தப் பட்டான்
நகை கடைக்காரன்
#அட்சயதிருதியை, என்றும் ஹைகூ பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
நகை வியாபாரிகள்
வெள்ளை கலர் நகையை விற்று,
வெள்ளையப்பனை கல்லா கட்டும்
நகை வியாபாரக் கொள்ளையர்கள்! #அட்சயதிருதியை
கல்லா கட்டிய நகைக்கடைகள்
எது எப்படியோ ‘நம்பிக்கை அதானே எல்லாம்' என்று கூறியும், ‘ரேட் செக் பண்ணி வாங்குங்க' என்று சொல்லியும் ஐஸ்வர்யா ராய், திரிஷா, சமந்தா, அமிதாப்பச்சன், பிரபு, உள்ளிட்ட நட்சத்திரங்களை வரவேற்பறைக்கு அழைத்து வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து அட்சய திரிதியைக்கு நகைக்கடைகள் கல்லா கட்டிவிட்டன என்றே கூறலாம். விளம்பரத்தில் விதைத்ததை 2 நாட்களில் அறுவடை செய்துவிட்டனர் நகைக்கடைக்காரர்கள்.