ஓடும் பேருந்தில் ஓட்டுநர்-நடத்துநர் சண்டை... அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற 3 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அதில் பயணம் செய்த தாய், அவரது மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அரசு பேருந்தை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலை, தேனிமலை எம்.கே.எஸ். தியேட்டர் தெருவில் வசித்து வந்த கட்டுமான தொழிலாளி வெங்கடேசனின் மனைவி கலைவாணி(30). இவர்களது பிள்ளைகள் நந்தினி(6), விஷ்ணு(5). குழந்தைகள் இருவரும் அருகிலிருந்த பள்ளியில் படித்து வந்தனர்.
நேற்று மதியம் பள்ளியிலிருந்து பிள்ளைகள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார் கலைவாணி. அப்போது அவருடன் அதே பள்ளியில் படித்த டீ விற்பனையாளர் ஆனந்தன் மகன் சுமனும் இருந்துள்ளார்.
கலைவாணியின் வாகனம் தேனிமலை தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் உள்ள மர இழைப்பகம் எதிரே சென்றபோது எதிர்பாராத விதமாக திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் சுமன், விஷ்ணு, கலைவாணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயங்கலுடன் மீட்கப்பட்ட சிறுமி நந்தினி, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் தப்பித்து ஓடி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தை கற்களால் அடித்து நொறுக்கினர். மேலும், கருங்கற்களை சாலையில் போட்டு மறியலிலும் ஈடுபட்டனர்.
விபத்து மற்றும் பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவலறிந்த தி.மலை நகர காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘ஓடும் பேருந்தில் நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு இடையே உண்டான தகராறே விபத்திற்கு காரணம்' எனத் தெரிய வந்துள்ளது.
எனவே, தப்பி ஓடிய ஓட்டுநர், நடத்துநரை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். தேனிமலையில் மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில், கெங்கையம்மன் கோயில் முன்பாக 3 இடங்களில் வேகத்தடை அமைத்து தர வேண்டும். தேனிமலை பகுதியில் பேருந்துகளை மெதுவாக இயக்க உத்தரவிட வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உங்கள் கோரிக்கைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆய்வாளர் சுரேஷ் கொடுத்த உத்தர வாதத்தை, ஏற்க மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் முத்துகுமாரசாமி, வட்டாட்சியர் வேடியப்பன் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களின் வேண்டுகோளின் படி, ‘3 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படும், தேனிமலையில் பேருந்துகளை மெதுவாக இயக்க அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு பரிந்துரை செய்யப்படும்' என உறுதியளித்ததின் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இச்சம்பவத்தால், திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரான செங்கம் வட்டம் கீத்தாண்டப்பட்டு கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணன்(40), போலீஸில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications