திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூடுதலாக 32 இடங்களில் சிசிடிவி கேமரா: ஆட்சியர் தகவல்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூடுதலாக 32 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளன என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கூடுதலாக 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆட்சியர் வெங்கடேஷ் திடீரென ஆய்வு செய்தார். கோயில் கடற்கரை, நாழிகிணறு, பஸ் நிலையம், பிரகாரம் உள்ளிட்ட இடங்களையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கோயில் விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில்," திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், மின் விளக்கு, வாகனம் நிறுத்துமிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தேன்.
கூடுதலாக வாகனத்தை நிறுத்துவதற்கு இடத்தைத் தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு வரைபடத்தை வரைய உத்தரவிட்டுள்ளேன். அதே போல் கூடுதலாக கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தற்போது 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கோயில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications