அதிமுகவில் படித்தவர்களுக்கும் சீட்...!
சென்னை: அதிமுகவில் இந்த முறை படித்தவர்களுக்கும் நிறைய வாய்ப்பளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் படித்த முகங்களையும் நிறையவே காண முடிகிறது.
பல புதியவர்களுக்கு வாய்ப்பளித்த முதல்வர் ஜெயலலிதா, பழைய முகங்கள் சிலவற்றையும் கட்சியினரின் திருப்திக்காக சேர்த்துள்ளார்.
மேலும் இந்த முறை படித்த வேட்பாளர்கள் எண்ணிக்கை சற்று கணிசமாகவே உள்ளதாகவும் தெரிகிறது.
ஆங்கில அறிவு அவசியமாச்சே
முக்கியமாக ஆங்கிலத்தில் பேசக் கூடிய, எழுதப் படிக்கக் கூடியவர்கள் அவசியம் என்பதால் அப்படிப்பட்டவர்களாகப் பார்த்து தேர்வு செய்துள்ளாராம் ஜெயலலிதா.
எல்லா நேரத்திலும் தான் இருக்க முடியாதே
டெல்லியில் நாளை தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைக்கும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், தூது போதல் உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு ஆங்கிலம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால்தான் இந்த கூடுதல் அக்கறையாம்.
15 வக்கீல்கள்
வேட்பாளர் பட்டியலில் 15 பேர் வக்கீலுக்குப் படித்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் 3 பேர்
எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர்கள் 3 பேர் ஆவர்.
வாத்தியாரும் இருக்காரே
அதிமுக என்றால் வாத்தியார் ஞாபகம்தான் வரும்.. அதாவது எம்.ஜி.ஆர். ஆனால் இந்த வேட்பாளர் பட்டியலில் பி.எட் படித்த ஒரு வாத்தியார் இடம் பெற்றுள்ளார்.
37 பேர் பட்டதாரிகள்
வேட்பாளர் பட்டியலில் 37 பேர் பட்டதாரிகள் ஆவர். 3 பேர் மட்டுமே படிக்காதவர்கள். இவர்களுக்கு விசுவாசம், நீண்ட கால கட்சிப் பணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சீட் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
இந்த ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம்
முக்கிய ஜாதிகளுக்கு நிறைய வாய்ப்புகளை அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, ரெட்டியார், மீனவர், நாயுடு, பிள்ளைமார், முஸ்லீம்கள், யாதவ், முத்தரையர் ஆகிய பிரிவினருக்கு தலா ஒரு சீட் கொடுத்துள்ளார்.