சிறைக் கைதிகளாக 4 லட்சம் வாக்காளர்கள்!!
சென்னை: தினம் தினம் அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையால் வெளியில் இருக்கும் மக்களைவிட, சிறைக்குள் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகின்றது.
இந்தியாவில் மொத்தமாக உள்ள 1,400 சிறைகளில் கிட்டத்தட்ட 4 லட்சம் கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், காவல் நீடிப்பு கைதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு கைதிகள் உள்ளனர்.

ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் அவருடைய வாக்குரிமை உட்பட சட்டப்படி அங்கீகரிப்பட்ட உரிமைகள் அனைத்தையும் இழக்கிறார். இதனால், இவர்களுக்கும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறையில் இருப்பவர்களில் விசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தால் கைது செய்யப்படும் பழைய குற்றவாளிகளுக்கு ஓட்டுரிமை உள்ளது.
கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் இவர்களும் வாக்களிக்க முடியாது. மற்ற குற்றவாளிகளில் கடும் தண்டனை பெற்றவர்கள், காவல் நீடிப்பு கைதிகள் ஆகியோர் வாக்களிக்கும் உரிமையை இழக்கின்றனர்.
இது குறித்து முன்னாள் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றிய கண்ணதாசன் கூறுகையில், "முன்தடுப்பு குற்றவாளிகள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு வாக்குரிமை உள்ளது. இவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம். இவர்கள் மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் 2 % மட்டுமே.
தண்டனை கைதிகள் 34%, விசாரணைக் கைதி மற்றும் காவல் நீடிப்பு கைதிகள் 64%, என அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் ஜனநாயக கடமையில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறுகையில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுபவர்கள் குற்றம் செய்தவர்களோ, தண்டனை பெற்றவர்களோ அல்ல.
இந்த வகையினர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பார்கள் என்ற நோக்கத்தில் முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் கைது செய்யப்படுவதால், இவர்களின் நடமாட்டம் மட்டுமே தடுக்கப்படுகிறது. உரிமைகள் தடுக்கப்படுவதில்லை. ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது அவருடைய சிவில் உரிமைகள் மட்டுமே தடுக்கப்படுகின்றன. மற்றபடி, அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுவதில் இருந்து தடுக்கப்படுவது கிடையாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications