தமிழகம்: இன்று நள்ளிரவு முதல் 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்கத் தடை
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு 45 நாட்கள் கடலில் சென்று விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீ்ன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். இதன்படி தமிழக கடற்கரை பகுதிகளில் இன்ற நள்ளிரவு முதல் மே மாதம் 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த தடை அமுலுக்கு வருகிறது.
அதே நேரத்தில் கட்டுமரங்களில் கடற்கரையை ஓட்டிய பகுதிகளில் மீன்பிடிக்க எந்த தடையும் கிடையாது. இந்த தடை காரணமாக தூத்துக்குடியில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்.
இந்த 45 நாட்களும் மீனவர்கள் தங்களுது படகில் உள்ள பழுதுகள், வலையில் உள்ள பழுதுகளை சரிசெய்தல், வலைகளை பின்னுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். தடை காலத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு தொழில் இல்லாததால் அவர்கள் வறுமையில் வாடுவர். இதனை கருத்தில் கொண்டு மீன்பிடி தடை காலத்தில் அரசு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை வழங்கி வருகிறது. இந்த நிவாரண தொகை போதாது என்றும் இந்த தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகி்ன்றனர்.
மீன்படி தடை காரணமாக தூத்துக்குடியில் நேரடியாக 6 ஆயிரம் மீனவர்களும், மறைமுகமாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் பாதிக்கப்படுவர். இந்நிலையில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கி உள்ளதால் தற்போது குறைந்த அளவிலேயே படகுகள் கடலுககு சென்றுள்ளன. அவர்களும் அவசரமாக திரும்பி கொண்டிருக்கின்றனர். இதனால் மீன்களின் விலை கடுமையாக உயரும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.