பிடிஆர் உள்பட 5 அமைச்சர்கள் உள்பட முக்கிய 12 தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைவு.. கவனிச்சீங்களா!
சென்னை: தமிழகத்தில் அமைதியான முறையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 2021 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 73.63ல் இருந்து 85.15% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கூட அமைச்சர்கள் களமிறங்கிய 5 தொகுதிகள் உள்பட மொத்தம் 12 சட்டசபை தொகுதிகளில் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது தேர்தல் ஆணையத்தின் டேட்டா வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது மொத்தம் 73.63 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. ஆனால் நேற்று முன்தினம் நடந்த சட்டசபை தேர்தலில் வாக்கு சதவீதம் முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. மொத்த வாக்கு சதவீதம் 85.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த வாக்கு சதவீதம் உயர்வுக்கு 'சார்' எனும் வாக்களர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தான் முக்கிய காரணமாகும். அதேவேளையில் இன்னும் சிலர் விஜய்யின் அரசியல் வருகை தான் வாக்குப்பதிவை உயர்த்தி உள்ளதாக கூறி வருகின்றனர். தமிழகத்தில் மாற்றம் வேண்டி விஜய் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவருக்கு அதிகமானவர்கள் வாக்களித்துள்ளதால் தான் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதாக தவெகவினர் கூறி வருகின்றனர்.
12 தொகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு
இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் 2021 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போதும் இந்த முறை அதிகரித்து இருந்தாலும் கூட அமைச்சர்கள் களமிறங்கிய 5 தொகுதிகள் உள்பட மொத்தம் 12 சட்டசபை தொகுதிகளில் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த 12 தொகுதிகளில் 8 சென்னை மாவட்டத்திலும், 2 மதுரை மாவட்டத்திலும் உள்ளது. திண்டுக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் தலா ஒரு தொகுதிகள் உள்ளனர்.
துறைமுகம் - சைதாப்பேட்டை
சென்னையை எடுத்து கொண்டால் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் மொத்தம் 99,404 வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது குறைவாகும். ஏனென்றால் அந்த தேர்தலில் துறைமுகம் தொகுதியில் மொத்தம் 1.01 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
அதேபோல் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீண்டும் திமுக சார்பில் களமிறங்கி உள்ளார் இங்கு 2021ல் 1.59 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 1.58 லட்சம் வாக்குகள் தான் பதிவாகி உள்ளது.
ஒட்டன்சத்திரம் - மன்னார்குடி - மதுரை மத்தி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சக்கரபாணி போட்டியிட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலை ஒப்பிடும்போது 461 வாக்குகள் குறைந்து தற்போது 1.99 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதேபோல் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மீண்டும் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இங்கு 688 வாக்குகள் குறைந்து 1.40 லட்சம் பதிவாகி உள்ளது. அதேபோல், தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதியில் 600 வாக்குகள் குறைந்து 1.47 லட்சம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
ஆதவ் - தமிழிசை தொகுதிகள்
இந்த 5 அமைச்சர்களின் தொகுதிகளை தவிர்த்து பார்த்தால் சென்னையில் மேலும் 6 சட்டசபை தொகுதிகளில் வாக்கு செலுத்திய வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி கடந்த 2021 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை ஆர்.கே. நகர் தொகுதியில் 6,017 வாக்குகள், தவெகவின் ஆதவ் அர்ஜுனா களமிறங்கி உள்ள வில்லிவாக்கம் தொகுதியில் 2,333 ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி போட்டியிட்டுள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் 4,384 ஓட்டுகள், அண்ணா நகர் தொகுதியில் 2,167 ஓட்டுகள், தியாகராய நகர் தொகுதியில் 3,855 ஓட்டுகள், பாஜகவின் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிட்டுள்ள மயிலாப்பூர் தொகுதியில் 3,195 வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது. அதேபோல் தென் மாவட்டங்களில், மதுரை தெற்கு தொகுதியிலும் 2021 சட்டசபை தேர்தலைவிட இப்போது 6,197 வாக்குகள் குறைந்து 1.40 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications