காவிரியில் நீரை திறக்க வலியுறுத்தி மறியல்- 5 ஆயிரம் விவசாயிகள் கைது
திருவாரூர்: காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிடக் கோரியும் மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்கக் கோரியும் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் போது ஆங்காங்கே விவசாயிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 ஆயிரம் விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, லால்குடி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சை, நாகை உள்ளிட்ட 100 இடங்களுக்கு மேல் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
போராட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, போலீசார் அங்காங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு திமுக, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.