போர்க் கப்பலை பார்வையிட இன்று கடைசி நாள்: சென்னை தீவுத்திடலில் அலைமோதிய கூட்டம்
போர்க் கப்பலை பார்வையிட இன்றே கடைசி நாளாகும். இதற்காக சென்னை தீவுத்திடலில் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை: சென்னை துறைமுகத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ள போர்க் கப்பலை பார்வையிட இன்றே கடைசி நாளாகும். இதனால் இவற்றை பார்வையிட மக்கள் ஆயிரக்கணக்கானோர் கூட்டமாக குவிந்தனர்.
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் பாதுகாப்பு துறையின் ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சி தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை வர்த்தக அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்து முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
ராணுவ கண்காட்சியையொட்டி வந்துள்ள அரவிந்த், ஷயாத்ரி, சுமத்ரா, ஹமோர்தா, தூத்ரி உள்ளிட்ட 5 போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை 3 தினங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பொது மக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆதார் அட்டை
இதன்படி போர்க்கப்பலை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த கப்பல்களை பார்வையிட வந்த மக்கள் சென்னை தீவுத்திடலில் தங்களின் ஆதார் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளின் நகலுடன் பதிவு செய்து கொண்டனர்.
கேமராவுக்கு அனுமதி இல்லை
இதையடுத்து அவர்களை அங்கிருந்து பேருந்துகள் மூலம் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக 48 பேருந்துகள் இயக்கப்பட்டன. கப்பல்களுக்குள் செல்ல கேமரா, உணவு பொருட்களுக்கு அனுமதியில்லை. செல்போனுக்கு அனுமதி உண்டு. கப்பல்களில் ராக்கெட் லாஞ்சர்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கடற்படை வீரர்கள் விளக்கமளித்தனர்.
பேருந்து பயணம்
இந்த 4 கப்பல்களையும் மக்களும், பள்ளி மாணவர்களும் சாரை சாரையாக குவிந்து சென்று பார்வையிட்டு வந்தனர். போர்க் கப்பல்களை பார்வையிட்டவுடன் அதே பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டு தீவுத்திடலில் விடப்பட்டனர்.
இன்றே கடைசி நாள்
பொதுமக்கள் அந்த கப்பல்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இன்றுடன் கப்பல்களை பார்வையிட கடைசி நாள் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட்டம் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் தீவுத்திடலுக்கு மக்கள் இன்று காலை 6 மணி முதலே படையெடுத்தனர்.