இன்று முதல் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் இன்று முதல் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 169 மதுக்கூடங்கள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 169 மதுக்கூடங்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மேலும் 500 கடைகள் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 18ம் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து 20 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி முதல்வர் பொறுப்பை ஏற்றார். அப்போது, ஏற்கனவே 500 கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மேலும் 500 கடைகள் மூடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மண்டலத்தில் 105 டாஸ்மாக் கடைகள் 63 மதுபார்கள் மூடப்படுகின்றன. கோயமுத்தூரில் 44 டாஸ்மாக் கடைகள், 20 பார்கள் மூடப்படுகின்றன. சேலத்தில் 133 டாஸ்மாக் கடைகள், 26 பார்கள் மூடப்படுகின்றன. திருச்சியில் 119 டாஸ்மாக் கடைகள் 23 பார்களும், மதுரையில் 99 டாஸ்மாக் கடைகளும் 37 பார்களும் மூடப்படுகின்றன.
மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்திலேயே மாற்றுப்பணி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மேலும் 500 கடைகள் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.