பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தல்... சேலத்தில் பகீர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர்: பிறந்து ஏழே நாளான பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கடத்திய சம்பவம் சேலம் மேட்டூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரமலை பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் கடந்த 21ம் தேதி இரவு மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை எடை குறைவாக இருந்ததால், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் பவித்ராவிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் குழந்தையோடு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று நண்பகலில், பவித்ரா தங்கியிருந்த அறைக்குச் சென்ற பெண் ஒருவர், குழந்தையை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் குழந்தையோடு திரும்பாத நிலையில், குழந்தை கடத்தப்பட்டதை பவித்ரா உணர்ந்து கதறி அழுதார்.
பவித்ராவின் புகாரின் அடிப்படையில் மேட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை கடத்திச் சென்றப் பெண், கடந்த 3 நாட்களாக மருத்துமனையிலேயே தங்கியிருந்ததும், மருத்துவமனை பணியாளர் எனக் கூறி அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களிடம் பேசி வந்ததும் தெரியவந்தது. இது மருத்துவமனை வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் குழந்தை காணாமல் போன வார்டில் கண்காணிப்பு கேமாரா இல்லாததால் பெண்ணைக் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் மருத்துவமனையின் மற்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.