7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து- தமிழக அரசு உத்தரவு!
சென்னை: மின்சார வாரியத் தலைவர் ஞானதேசிகன் உட்பட 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளராக நிலை உயர்வு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தலைமைச் செயலாளர் ஒருவர் இருப்பதால், இனி அவர்கள் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகிப்பர்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் பிறப்பித்துள்ள உத்தரவு:
1982-ம் ஆண்டு பணிக்கு வந்த தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.ஞானதேசிகன், தலைமைச் செயலாளராக நிலை உயர்வு பெறுகிறார். அவர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் பதவி வகிப்பார்.
அதுபோல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கே.ஸ்கந்தன், தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரமேஷ்குமார் கன்னா, தொழில்துறை முதன்மைச் செயலாளர் சி.வி.சங்கர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஹேமந்த்குமார் சின்ஹா, மத்திய அரசின் கடல் பொருட்கள் உற்பத்தி மேம்பாட்டு ஆணைய தலைவர் லீனா நாயர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டி.பிரபாகரராவ் ஆகியோர் தலைமைச் செயலாளராக நிலை உயர்வு அளிக்கப்பட்டு, கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.