உள்ளாட்சி தேர்தலில் 12 மேயர்களில் 7 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்
சென்னை: அக்டோபரில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 12 மேயர் பதவிகளில் 7 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கோரிக்கைமீதான விவாதம் நடைபெற்றது.

உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்ற போது திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசாரமாக பேசினர்.
திமுக உறுப்பினர் கீதா ஜீவன், 1996 ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தான் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார், 1994ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக தான் இந்த முடிவை எடுத்தது என்றார்.
அப்போது எழுந்த திமுக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஏன் அப்போதே தேர்தலை நடத்தவில்லை? என கேள்வி எழுப்பினார்.
மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக திமுக - அதிமுக இடையே கடுமையான விவாதம் நடந்தது. காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை திமுக.,வோ, அதிமுகவோ கொண்டு வரவில்லை. ராஜீவ் பிரதமராக இருந்த போது காங்கிரஸ் கட்சிதான் தான் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது என்றார்.
பின்னர் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அக்டோபர் மாதம் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 12 மேயர் பதவிகளில் 7 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மகளிரின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
செவிலியர் பற்றாக்குறை
அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்கறை உள்ளது என்ற கேள்விக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துப் பேசினார். கடந்த 5 ஆண்டுகளில்,7 ஆயிரம் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், 1900 செவிலியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகின்றது. எனவே, அவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
தற்போது, ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில், 129 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 142 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications