அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 8 பேர் மிஸ்ஸிங்... என்னான்னு விசாரிச்சா கதை அப்படியாமே!
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 8 பேர் பங்கேற்கவில்லை.
Recommended Video
சென்னை : சட்டசபை அடுத்த வாரம் தொடங்க உள்ளநிலையில் எம்எல்ஏக்கள் செயல்படும் விதம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் 8 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை, இவர்கள் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று காரணம் கேட்கப்பட்டுள்ளதாம்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக சட்டசபைக்கு வருகிறார். அதிமுகவினரை வெளி மேடைகளில் வைத்து விளாசித் தள்ளும் தினகரன் சட்டசபையில் எப்படி செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே உள்ளது.
இந்நிலையில் ஜனவரி 8 முதல் தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் செயல்படும் முறை குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் நடைபெற்றது. அதில் தினகரன் எவ்வளவு விமர்சனங்கள் செய்தாலும் எம்எல்ஏக்கள் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சட்டசபையில் அமைதி காக்க வேண்டும்
தினகரன் தேவையில்லாத கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடும் என்று முன் எச்சரிக்கையாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டால், பின்னர் தினகரன் அணிக்கும், அதிமுகவிற்குமான விவாதங்களால் சட்டசபை கலைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8 எம்எல்ஏக்கள் மிஸ்ஸிங்
சட்டசபையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 103 பேர் மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மிஸ்ஸான 8 எம்எல்ஏக்கள் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் கேட்கப்பட்டதாம்.
ஏன் பங்கேற்கவில்லை?
அதற்கு 2 எம்எல்ஏக்கள் உடல்நிலை சரியில்லை என்பதால் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் 2 எஎம்எல்எக்கள் தங்கள் தொகுதியில் அரசு விழா நடப்பதை காரணமாகச் சொல்லியுள்ளனர்.
எம்எல்ஏக்கள் மத்தியில் சலசலப்பு
இதே போன்று 3 எம்எல்ஏக்கள் வெளியூருக்கு செல்வதை காரணமாகச் சொல்லி கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். இந்த 7 பேர் தவிர மணப்பாறை எம்எல்ஏ சண்முகம் மட்டும் தான் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணத்தை சொல்லவில்லையாம், இது மற்ற எம்எல்ஏக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.