எடியூரப்பாவுக்கு அவசரப்பட்டு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்... திமுகவில் கடும் புகைச்சல்!
எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே பாஜகவின் எடியூரப்பாவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து சொன்னது அக்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை தீண்டத்தகாத கட்சியாக பார்ப்பது போல நடித்துக் கொண்டிருக்கிறது திமுக. கடந்த காலங்களில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுகவும் இடம்பெற்றது என்பது வரலாறு.
அதன்பிறகு பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலேயே திமுக நீடித்தது. ஆனால் அண்மைக்காலமாக காங்கிரஸை கழற்றிவிட முயற்சிக்கிறது திமுக.
அத்துடன் இல்லாமல் மத்திய பாஜக அரசுக்கு எதிராக வலிமையான போராட்டங்களை நடத்தாமல் வலிக்காத வகையிலான நடவடிக்கைகளையே திமுக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாஜக அரவணைத்த, அரவணைக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான அரசுகளுக்கு பெரும் நெருக்கடி தராத மென்மை அரசியல் போக்கையே திமுக கடைபிடித்தும் வருகிறது.
மத்திய பாஜக அரசும் இதுவரை திமுக சீண்டாமல்தான் இருந்து வருகிறது. இப்படி பாஜக- திமுக இடையே திரைமறைவு இணக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் 3-வது அணி முயற்சியில் திமுக இறங்கியது. ஆனால் இது பாஜகவுக்கு சாதகமான முடிவு என இடதுசாரிகள் விமர்சித்தனர்.
இதனாலேயே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் இருப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அடித்து சொன்னது. பாஜகவுடன் திமுக மென்மையான இணக்கத்தை காட்டி வருகிறது என்கிற விமர்சனங்களை உறுதி செய்யும் வகையில் கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாதி வந்த நிலையிலேயே புதிய "கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் வாழ்த்துத் தெரிவித்தார்.
பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவினர் வாழ்த்து சொல்வது என்பது வேறு. அது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அவசரப்பட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து சொன்னது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
நேரம் செல்ல செல்ல கர்நாடகா நிலவரம் களேபரமானது. இதனால் ஸ்டாலினின் வாழ்த்து கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. இவ்வளவு வேகமாக பாஜகவுக்கு வாழ்த்து சொல்லித்தான் ஆக வேண்டுமா? ஏற்கனவே 3-வது அணி முயற்சியே பாஜகவின் பி டீம்தான் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனை உறுதி செய்யத்தானா ஸ்டாலின் இப்படி ஒரு வாழ்த்தை அவசரப்பட்டு தெரிவித்தாரா? என்கிற கேள்வி திமுகவுக்குள் எழுந்திருக்கிறது. பாஜகவை வலிமையாக எதிர்த்து களமாட வேண்டிய திமுக இப்படி வலிந்து போய் உறவுக்கு முயற்சிப்பது சகிக்கவில்லை என்பது திமுகவில் பிடிப்புள்ளவர்களின் குமுறல்.