லோக்சபா தேர்தல் கருத்துக் கணிப்புகள்: இழுபறியில் ஆ.ராசா, திருமாவளவன்?
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளின் முடிவுகள் அடிப்படையில் நீலகிரியில் திமுகவின் ஆ. ராசாவும் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவனும் இழுபறியில் இருப்பதாகவே தெரிகிறது.
லோக்சபா தேர்தல் கருத்து கணிப்புகளை தமிழகத்தில் தந்தி டிவி, குமுதம், நக்கீரன், ஜூனியர் விகடன் ஆகியவை வெளியிட்டு வருகின்றன. கட்சிகள் பெறும் ஒட்டுமொத்த இடங்கள் என்ற அடிப்படையில் இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் வேறுபாடாக இருக்கின்றன.
ஆனால் சில தொகுதிகளின் நிலவரங்கள் பொதுவானதாக இப்படித்தான் நிலைமை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன.
நீலகிரி ஆ. ராசா
இந்திய அளவில் நட்சத்திர தொகுதிகளில் ஒன்று நீலகிரி. இங்கு திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட போதும் வேட்புமனு சிக்கலில் அந்த கட்சியும் அதன் கூட்டணியும் இப்போது இங்கு போட்டியில்லை.
தொடக்கத்தில் தந்தி டிவி கருத்து கணிப்பை வெளியிட்ட போது மோடி அலையில் நீலகிரியில் அதிமுக, திமுக மூழ்கிவிட்டது என்று சொல்லப்பட்டது. ஆனால் தந்தி டிவியின் இறுதி நிலவரத்தில் ஆ. ராசா இழுபறியில் இருக்கிறார் என்கிறது. ஜூனியர் விகடனோ ஆ. ராசா தோற்பார் என்கிறது. நக்கீரனோ ஆ. ராசா வெல்வார் என்கிறது.
பாஜக விலகல்
பாஜக வேட்பாளர் போட்டியிலிருந்து விலக நேரிட்ட போது ஆ.ராசாவை வீழ்த்துவதற்காக அதிமுக விரித்த வலைதான் காரணம் என்று கூறப்பட்டது. அதாவது பாஜகவுக்குப் போகும் வாக்குகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக அப்படியே அதிமுகவுக்கு சிந்தாமல் சிதறாமல் போகும்.. அதனால் ஆ.ராசா வெல்வது கடினம் என்று சொல்லப்பட்டது.
பாஜக- அதிமுக மோதல்
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது. இதனால் சிந்தாமல் சிதறாமல் பாஜக வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கு போவது சாத்தியமே இல்லாமல் போய்விட்டது. இந்த வாக்குகள் சரிசமமாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் பிரியக் கூடும் என்று கூறப்படுகிறது.
மலைப்பகுதியில் ஆ. ராசா
நீலகிரி தொகுதியின் மலைப்பகுதிகளில் ஆ. ராசாவின் செல்வாக்கு அதிகம் என்பது பொதுவான கணிப்பு. ஆனால் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப்பகுதிகள் அதிமுகவின் கோட்டை என்றும் கூறப்படுகிறது. இத்தகைய காரணங்களாலேயே நீலகிரியில் ஆ.ராசாவுக்கு எப்படிப்பட்ட முடிவு காத்திருக்கிறது என்பது இழுபறியாக இருக்கிறது.
சிதம்பரம்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக இருப்பது சிதம்பரம். இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் தொல். திருமாவளவன். அதிமுக சார்பில் சந்திரகாசியும் பாமக சார்பில் சுதா மணிரத்னமும் களத்தில் உள்ளனர்.
கணிப்புகள்
தந்தி டிவி நேற்றைய இறுதி கணிப்பில் திருமாவளவன் இழுபறியாக இருக்கிறார் என்கிறது. நக்கீரனும் ஜூவியும் திருமா வெல்வார் என்கிறது.
திருமா எப்படி?
சிட்டிங் எம்.பி.யாக இருந்த போதும் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை அதிகம் மேற்கொள்ளவில்லை திருமா என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. அதே நேரத்தில் தலித்துகள், முஸ்லிம்கள் வாக்குகள் பெரும்பான்மையாக அப்படியே திருமாவுக்கு விழுமேயானால் அவர் மீண்டும் வெல்வார் என்று கூறப்படுகிறது. ஆனால் தலித் மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு பெற்ற மணிரத்னத்தின் மனைவி சுதா, பாமக அணியில் போட்டியிடுகிறார். பாமகவின் வன்னியர் வாக்குகள் அவருக்கு கிடைக்கலாம் என்றாலும் கூட தலித் வாக்குகள் அவருக்கு போகாது என்றே கூறப்படுகிறது.
அதிமுகவின் சந்திரகாசியை வெல்ல வைத்தாக வேண்டும் என்ற அசைன்மெண்ட்டோடு தொகுதியில் முகாமிட்டிருக்கிறார் செங்கோட்டையன். அனைத்து சமூக மக்களின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளி அதிமுகவுக்கு கொண்டுசேர்க்க வேண்டும் என்பதில் சந்திரகாசிக்கு சாரதியாக செங்கோட்டையன் வியூகம் வகுத்து கொடுத்து செயல்பட்டு வருகிறார். என்னதான் தலித்துகள், சிறுபான்மையினர் வாக்குகள் திருமாவுக்கு கிடைத்தாலும் இதர சமூகத்தினரின் பெரும்பான்மை வாக்குகள் அதிமுகவுக்கு செல்லும் நிலையில் திருமாவுக்கு இழுபறிதான் என்றே சொல்கின்றன கருத்து கணிப்புகளும் அதை பற்றி ஆராயும் அரசியல் பார்வையாளர்களும்.