"மப்பில்" தகராறு.. கணவரை கடப்பாறையால் அடித்துக் கொன்று விட்டு ஆற அமர வேடிக்கை பார்த்த மனைவி!
புதுச்சேரி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: அரியாங்குப்பம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே கடப்பாறையால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் இசைமணி. 45 வயதான இவர் சமூக நலத்துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு கோமதி என்ற மனைவியும், இளஞ்செழியன் , இசைவேந்தன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான இசைமணி நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
அடிக்கடி தகராறு
கணவர் அடிக்கடி தகராறு செய்வதால் கோமதி கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டுக்கு திரும்பினார்.
நள்ளிரவுக்கு மேல் நீடித்த சண்டை
நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த இசைமணி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நள்ளிரவு 12 மணிக்கும் மேலாக தகராறு நீடித்துள்ளது.
கடப்பாறையால் தாக்கிய மனைவி
இதனால் ஆத்திரமடைந்த கோமதி கடப்பாறையால் கணவரை தலையில் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இசை மணி மயங்கி விழுந்தார்.
கதறி அழுத கோமதி
இதையடுத்து வீட்டின் மொட்டை மாடிக்கு கோமதி சென்றுவிட்டார். அதிகாலை 3 மணியளவில் கோமதி கீழே இறங்கி வந்து பார்த்தபோது இசைமணி பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர்.