சூலாயுதத்துடன்.. ஜெ.வை பார்க்க அப்பல்லோவுக்குள் அதிரடியாக பாய்ந்த ‘அருள்வாக்கு’ ஜெயந்தி!
சென்னை: சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, கையில் சூலாயுதத்துடன் அருள் வாக்கு ஜெயந்தி என்பவர் மருத்துவமனையில் அதிரடியாக நுழைய முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க நாள்தோறும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
ஆனால், அவர்கள் அனைவருக்கும் முதல்வரைப் பார்க்க அனுமதி கிடைப்பதில்லை. இதனால் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் எப்போதும் கூட்டமாகக் காணப்படுகிறது. முதல்வர் சிகிச்சைப் பெற்று வருவதால் மருத்துவமனை வளாகத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், நேற்று இரவு கையில் சூலாயுதம் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தவாறு வந்த பெண் ஒருவர், மருத்துவமனை வாசலில் திடீரென பக்தி பரவத்துடன் ஆடி அருள்வாக்கு கூறியுள்ளார்.
பின்னர், ஆவேசமாக அவர் மருத்துவமனைக்குள் நுழையவும் முயற்சித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த அருள்வாக்கு ஜெயந்தி என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் மருத்துவமனை வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.