ஆவின் பால் கொள்ளையன் அதிமுக 'வைத்தி' உட்பட 8 பேரின் காவல் நீட்டிப்பு
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில் கைதான முன்னாள் அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் உள்பட 8 பேரின் நீதிமன்றக் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆவின் பாலை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை திண்டிவனத்தை அடுத்த ஊரல்கிராமத்தில் நிறுத்தி, சிலர் அந்த பாலை திருடி அதில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து கொண்டிருந்தனர். அதனை வெள்ளிமேடு பேட்டை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 9 பேரை கைது செய்தனர்.
விசாரணையின்போது பல வருடங்களாக ஆவின் பாலில் தண்ணீரைக் கலந்து மிகப் பெரிய அளவில் மோசடி நடந்து வருவது தெரிய வந்தது. மேலும் இந்த மோசடிக் கும்பலின் தலைவன் அதிமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் என்றும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்திய நாதன், பால்கோவா கம்பெனி உரிமையாளர்கள் சுதாகரன், சந்திரசேகரன் உள்பட பலரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பால்கோவா கம்பெனி உரிமையாளர்கள் சுதாகரன், சந்திரசேகரன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மீதமுள்ள வைத்தியநாதன் உள்பட 17 பேரும் நீதிமன்ற காவலில் கடலூர் சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் வைத்தியநாதன், காத்தவராயன், சென்னியப்பன், அர்ஜுனன் உள்பட 8 பேரின் காவல் நேற்று முடிவடைந்தது. அவர்களை கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து வந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ்பிரபு முன்னிலையில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கினை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்ட 8 பேரையும் மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் 8 பேரும் மீண்டும், விழுப்புரம் கோர்ட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வைத்தியநாதன் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.