ஜெயலலிதா ஆட்சியில் இல்லாதபோதும் ஆவின் வழங்கும் 'இனிப்புகள்'!
சென்னை: தமிழ்நாட்டில் குளோப்ஜாமூன், ரசகுல்லா போன்ற பால்பொருள்களை டின்களில் அடைத்து விற்பனை செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆவின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், "பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் குறித்த நேரத்தில் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அம்பத்தூரில் புதிதாக நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் ஜஸ்கீரிம், ஆயிரம் கிலோ பனீர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை சுமார் ரூபாய் 21 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் வரும் அடுத்த ஆண்டு ஜூனில் முடிவடையும்.
புதிய பால் பொருள்கள் அறிமுகப்படுத்தவும், அதிக நாள்கள் கெடாமல் இருக்கும் வகையில் டின்களில் அடைக்கப்பட்ட குளோப்ஜாமூன், ரசகுல்லா போன்ற பால் பொருள்களும் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்துள்ளார்.