விஜயகாந்தின் முடிவுக்கு நான்தான் காரணம்... சொல்வது டிராபிக் ராமசாமி
திருப்பூர்: சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்ததற்கு தான்தான் காரணம் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார். தேவைப்பட்டால் பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை தேமுதிக உடன் இணைக்கவும் முயற்சி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 64 தினங்கள் உள்ள நிலையில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தேமுதிக தங்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த கட்சிகள், தனித்து போட்டி என்ற விஜயகாந்தின் அறிவிப்பால், வேறு வேலை பார்க்க கிளம்பி விட்டனர்.

விஜயகாந்த் ஏன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் என்று ஆள் ஆளுக்கு ஒரு கதை சொல்ல, தனித்துப்போட்டி என்ற தேமுதிகவின் முடிவுக்கு தான்தான் காரணம் என கூறியுள்ளார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, " தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நான் சொன்ன யோசனையை ஏற்றுதான், அவர் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்திருக்கிறார். இதனை நான் வரவேற்கிறேன் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவை விட தேமுதிக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்.
தேமுதிகவுக்கு கூட்டணி தேவையில்லை. தனித்து போட்டியிட்டாலே தேமுதிக அதிக இடங்களில் வெற்றி பெற்று அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய டிராபிக் ராமசாமி, தேவைப்பட்டால் பாஜக, தமாகா ஆகிய கட்சிகளை தேமுதிக கூட்டணியில் சேர்க்க உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய டிராபிக் ராமசாமி, திமுக உடன் தேமுதிக கூட்டணி சேராது என்று பேட்டியளித்தார், அப்போதே பலரும் இதனை கிண்டலடிக்கும் விதமாக பேசினர். இந்த நிலையில் தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவிக்க தான்தான் காரணம் என்று கூறியுள்ளார் டிராபிக் ராமசாமி.












Click it and Unblock the Notifications