முதல்வர் பதவியை யார் சூடினாலும் முட்கிரீடமே - நடிகர் கமல்ஹாசன்
ஒரு அரசு இத்தனை சீரழிந்த பிறகு யார் கைக்கு வந்தாலும் அவர்களுக்கு சூட்டப்பட போவது முட்கிரீடம்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: ஒரு அரசு இத்தனை சீரழிந்த பிறகு அது யாரிடம் வந்தாலும் அது அவர்களுக்கு முட்கிரீடம் போல்தான் இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இளைஞர் கூட்டத்தை மட்டுமே நம்பி அரசியலுக்கு வரவுள்ளேன். நான் எப்போது தலைமையேற்பேன் என்பது குறித்து இப்போதே சொல்ல முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் சமீபகாலமாக தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இத்தனை நாள்களாக ஆட்சியாளர்களை வெளுத்து வாங்கிய அவர் தற்போது புதியதொரு அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக கூறி பீதியை கிளப்பியுள்ளார்.
அவர் தற்போது ஆங்கில, தமிழ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் அரசியலுக்கு தான் ஏன் வர விரும்புகிறார், ஆட்சியாளர்களிடம் உள்ள தவறு என்ன உள்ளிட்டவை குறித்து கூறி வருகிறார். அந்த வகையில் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
100 நாள்கள் என்று நான் கூறவில்லை
அந்த பேட்டியில் கமல் கூறுகையில், 100 நாள்களில் தேர்தல் வந்தால் களத்தில் இறங்க தயார் என்று நான் கூறவில்லை. ஒரு ஆங்கில நாளிதழுக்கு நான் பேட்டி கொடுத்த போது அதை தமிழாக்கம் செய்யும் போது ஊடகங்கள் தங்கள் தலைப்பு செய்தியை பளபளப்பாக்குவதற்காக அதுபோல் வெளியிட்டுள்ளன.
முதல்வர் நான் இல்லை
அந்த நெறியாளர் 50 நாள்களில் வருவீரா, 60 நாள்களில் வருவீரா?, 100 நாள்களில் வருவீரா? என்றார். அதற்குத்தான் நான் சரி 100 நாள்களென்று வைத்து கொள்ளுங்கள் என்றேன். இதுபோன்ற முடிவுகளை இத்தனை நாள்களுக்கு செய்வேன் என்று சொல்ல முடியாது. பயணத்துக்கான பாதையை வகுத்து கொண்டுதான் மக்களிடம் பேச வேண்டும். நான் முதல்வர் ஆகத் தயார் என்று நான் சொல்லவில்லை. முட்கிரீடம் என்பது நிர்வாக ரீதியில் உள்ள அனைவருக்குமே வரும். ஒரு அரசு இத்தனை சீரழிந்த பிறகு யார் கைக்கு வந்தாலும் அவர்களுக்கு சூட்டப்பட போவது முட்கிரீடம்தான்.
அரசியலில் ஞானம் பெறும் முயற்சி
அரசியலில் ஞானம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழகத்தில் கமல்ஹாசன் என்றில்லை, மாற்றம் தேவை என்பது மக்களின் மனதில் உள்ளது. திராவிட கட்சிகள், மற்ற கட்சிகளை மக்கள் விரும்பவில்லை. ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் சேருவதுதானா மக்களுக்கு முக்கியம். யார் யார் கூட சேர்ந்தா எனக்கென்ன. ஆனால் நல்லாட்சி நடைபெறவில்லையே. மக்கள் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே நல்லாட்சி நடைபெற்றதாக அர்த்தம்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இனி ஆட்சிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் இத்தனை நாள்கள் நடந்த அநியாயங்களுக்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். தகர்க்கப்பட்ட சுவர்களை எல்லாம் மீண்டும் கட்ட வேண்டும். அரசு கஜானாவை நிரப்ப வேண்டும். கேள்வி கேட்கும் மக்கள் பிரதிநிதிகள் குறைந்து கொண்டே வருகிறார்கள். இளைஞர் கூட்டத்தை மட்டுமே நம்பி அரசியலுக்கு வரவுள்ளேன். நான் எப்போது தலைமையேற்பேன் என்பது குறித்து இப்போதே சொல்ல முடியாது.
ராமானுஜரின் வழித்தோன்றல்
என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை. என்னுடைய கபாலத்தில் இருந்து இயக்கப்படுகிறேன். பெரியார் என்பவர் ராமானுஜரின் வழிதோன்றல். அதற்காக இருவரும் கூறியது ஒன்று என்று நான் சொல்லவில்லை. உயிருக்கு ஆபத்துடன் ராமானுஜர் செய்தது சமூக சேவை என்று நினைக்கிறேன். அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் காந்தி. அதற்கடுத்த கட்டத்துக்கு தமிழகத்துக்கு தேவை என்று எண்ணியதால் பெரியார் அதை வேறு ஒரு கட்டத்துக்கு கொண்டு சென்றார். இவர்கள் அனைவரும் சமூகத்துக்கு தேவையானவர்கள்தான்.
திமுக, திக உறுப்பினர் அல்ல
நான் திராவிடர் கழகத்தின் உறுப்பினரும் அல்ல. திமுகவின் உறுப்பினரும் அல்ல. எனக்கு பிடித்த நபர்கள் இந்த கட்சிகளில் இருந்திருக்கிறார்கள். எனக்கு பிடித்த சிந்தனைகள் இந்த கட்சிகளில் இருந்திருக்கிறது. பெரியாரிஸ்ட் என்று சொல்லும் கமல் எப்படி தேவர் மகன், சபாஷ் நாயுடு ஆகிய படங்களை எடுத்தார் என்று கேட்கிறீர்கள். மதுவிலக்கை பற்றியோ அல்லது மதாச்சாரியார்களை பற்றியோ படம் எடுத்தால் மது இருக்க வேண்டும், மதாசாரியும் இருக்க வேண்டும். சபாஷ் நாயுடுவில் எதை போற்றுகிறேன் என்பதை பார்க்க வேண்டும். எதை கிண்டல் செய்கிறேன் என்பதை பார்க்க வேண்டும். பெரியார் சிவன் பார்வதி பேசுவதை புராணமாக எழுதியுள்ளார். அதற்காக அவர் அவரது கொள்கையில் இருந்து மாறிவிட்டார் என்று அர்த்தமா
தமிழகம் சீர்குலைந்துள்ளது
காவி சட்டையோட ஓட்டுகளை ரஜினியை வைத்தும், கருப்பு சட்டையோட ஓட்டுகளை என்னை வைத்தும் வாங்குவதற்காக நாங்கள் களமிறக்கப்படுகிறோம் என்று கூறுவதற்கு ஆதாரம் வேண்டும். தமிழகம் சீர்குலைந்திருக்கிறது. அதை சீர் செய்வதுதான் முதல் கடமை. இப்போது இருக்கும் கடும் நோயிலிருந்து தமிழக மக்களை சரி செய்து விட்டு இந்திய அரசியல் குறித்து பேசலாம். மோடி ஆட்சியின் அலை எங்கள் மீது பட்டால் உடனடியாக விமர்சனங்களை வைப்போம்.
உண்மையை பேசியதில் சந்தோஷம்
திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை என்று இந்த முறையாவது உண்மையை பேசியதில் சந்தோஷம். இந்த பொய்யில் சில ரகசியங்கள் புதைத்து கிடப்பதாக மக்களும் நினைக்கிறார்கள், நானும் நினைக்கிறேன். என்னால் இயக்கமுடிந்தால் அந்த ரகசியங்கள் இன்றோ அல்லது நாளையோ வெளி வர வேண்டும். ஆனால் அதற்கு ஆவன செய்ய வேண்டிய அமைப்புகள் இருக்கின்றன. உண்மைகள் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார் அவர்.