இயக்குநர் ஷங்கர்தான் கமல்ஹாசனை தமிழக முதல்வராக்க முடியும்.. கலாய்க்கிறாராம் அமைச்சர் செல்லூர் ராஜூ
நடிகர் கமல்ஹாசனை இயக்குநர் ஷங்கர்தான் தமிழக முதல்வராக்க முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசனை இயக்குநர் ஷங்கர்தான் தமிழக முதல்வராக்க முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியலுக்கு வருவதற்காக தீவிரம் காட்டி வருகிறார். அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 7-ஆம் தேதி அவரது பிறந்த நாளன்று கட்சி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் எந்த அறிவிப்புகளும் இல்லை என்று கமல் தெரிவித்துவிட்டார்.

அரசியலுக்கு வர ரெடி
விவசாயிகள் பிரச்சினை, டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக நடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இதற்காக தமிழக அமைச்சர்கள் கமலை வறுத்தெடுக்கின்றனர்.

சாம்பல் கழிவுகளை பார்வை
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே எண்ணூர் கழிமுக பகுதிகளுக்கு நடிகர் கமல் சென்றார். பின்னர் வல்லூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆறுகளில் கொட்டப்படுவதால் அங்கு தண்ணீர் போக வழியின்றி வட சென்னையே மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

விவசாயிகளுக்கு உதவி
அதேபோல் விவசாயிகளை இன்று கமல்ஹாசன் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து ஏரி, குளங்களை கடவுளாக கும்பிடுங்கள் என்று அறிவுறுத்திய கமல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்தும் பேசியிருந்தார். இவ்வாறு கமல் களத்தில் இறங்கி பணியாற்றுவதை பார்க்கும்போது அவர் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே தெரிகிறது.

படத்தில்தான் முதல்வர்
நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ நியூஸ் 7 செய்தி சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கமல்ஹாசனை இயக்குநர் ஷங்கர்தான் முதல்வராக்க முடியும் என்று பதிலளித்துள்ளார். ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக இருப்பார். இதை மனதில் வைத்துக் கொண்டு செல்லூர் ராஜூ அவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications