முதல்முறையாக நகரி தொகுதிக்கு வந்த அமைச்சர் ரோஜா.. 10 அடி ரோஜா பூ மாலை அணிவித்த மக்கள்.. உற்சாகம்
நகரி: ஆந்திராவின் சுற்றுலா துறையாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தனது சொந்த தொகுதியான நகரிக்கு சென்ற ரோஜாவுக்கு கிரேன் மூலம் 10 அடி உயரத்திலான ரோஜாப்பூ மாலை அணிவித்து மக்கள் வரவேற்றனர்.
Recommended Video
செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் பிரசாந்திற்கு ஜோடியாக நடித்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால் தமிழகத்தில் கனவு கன்னியாக வலம் வந்தார். தமிழ்,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் இயக்குநர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஆந்திராவில் ரோஜா அரசியலில் ஈடுபட்டார்.
இந்தியை எவராலும் திணிக்க முடியாது.. ஆனால்.. திருவண்ணாமலையில் அமைச்சர் ரோஜா!
சந்திரபாபு நாயுடு
முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். அங்கு இரு முறை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவரது சொந்த கட்சியினராலேயே தோற்கடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். இதையடுத்து கட்சியில் சேர்ந்த போது இருந்த மவுசு குறைந்து ரோஜா மெல்ல ஓரங்கட்டப்பட்டார்.
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்
இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் கட்சியிலிருந்து விலகி அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் இணைந்தார். அந்த கட்சியின் மகளிர் அணி தலைவியும் இவர்தான். 2014ஆம் ஆண்டு நகரி தொகுதியில் ஜெகன் மோகன், ரோஜாவுக்கு வாய்ப்பளித்தார்.
முதல்முறையாக ரோஜாவுக்கு அமைச்சர் பதவி
அப்போது முதல் முறையாக ரோஜா வென்று சட்டசபைக்கு சென்றார். அப்போது ஒய்எஸ்ஆர் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது. சட்டசபையில் சந்திரபாபு நாயுடுவை கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தார். அவருக்கு எதிரான பிரச்சாரத்தையே 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ரோஜா முன் வைத்தார்.
இரண்டாவது முறை எம்எல்ஏ
இதையடுத்து இரண்டாவது முறையாக நகரி தொகுதி எம்எல்ஏவாக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அண்மையில் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவை மாற்றப்பட்டது. அப்போது அவர் ஆந்திர மாநில சுற்றுலா துறையின் அமைச்சராக பதவியேற்றார்.
ரோஜாவுக்கு அமைச்சர் பதவி
ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததை நினைத்து தமிழக மக்களும் ஆந்திர மக்களும் பெருமிதம் கொண்டனர். இந்த நிலையில் அமைச்சரான பிறகு முதல்முறையாக தனது சொந்த தொகுதியான நகரி தொகுதிக்கு அமைச்சர் ரோஜா வருகை தந்தார். திறந்தவேனில் நின்ற படியே மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
10 அடி ரோஜாப்பூ மாலை
அப்போது அந்த ஊர் மக்கள் தெருவின் இரு பக்கமும் வரிசையாக நின்று அவரை மலர்த்தூவி வரவேற்றனர். மேலும் கிரேன் மூலம் 10 அடியிலான ராட்சத ரோஜா மாலை அணிவித்து அமைச்சர் ரோஜாவை வரவேற்றனர். மக்கள் மலர்த்தூவி வரவேற்பதை மிகவும் உற்சாகமாக ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்.