சசிகலாவை போயஸ்கார்டனில் சந்தித்த நடிகை ஸ்ரீதேவி - காரணம் என்ன தெரியுமா?
நடிகை ஸ்ரீதேவி சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையம் சென்று ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். சசிகலாவிடம் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளரின் மரணம் அக்கட்சியின் தொண்டர்களை மட்டுமல்ல அவரை நேசிக்கும் மக்களையும் அதிக அளவில் பாதித்து உள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாதவர்கள், பின்னர் அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

முக்கிய பிரமுகர்கள் சிலர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு சசிகலாவை சந்தித்து துக்கம் விசாரித்து விட்டு செல்கின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக இருந்த போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார்.
அப்போதிருந்தே ஸ்ரீதேவிக்கும்,ஜெயலலிதாவுக்கும் இடையே நல்ல அன்பு உண்டு.ஜெயலலிதா மறைவு குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்த ஸ்ரீதேவி, ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவாவது சென்னை வருவேன் என தெரிவித்திருந்தார். சிறுவயதில் ஜெயலலிதாவின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருப்பது போன்ற போட்டோவை போட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
அவர் சொன்னது போலவே நேற்று மாலை சென்னை வந்த நடிகை ஸ்ரீதேவி,நேராக போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு சசிகலாவை சந்தித்த துக்கம் விசாரித்தார். இந்த புகைப்படத்தை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சசிகலாவை நடிகர் அஜீத் சந்தித்தார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications