இந்தாங்க தோசை சாப்பிடுங்க.. மறக்காம ஓட்டுப் போட்டுருங்க.. அதிமுக பெண் வேட்பாளரின் நூதன பிரச்சாரம்
சென்னை: சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நூர்ஜஹான் தனது தொகுதியில் நூதனமான முறையில் பிரச்சாரம் செய்து வாக்காளர்களைக் கவர்ந்திழுத்தார்.
மேலும் ஏகப்பட்ட வாக்குறுதிகளையும் தொகுதி மக்களிடம் தெரிவித்து ஓட்டு வேட்டையாடினார் நூர்ஜஹான். புதுப்பேட்டை, கொய்யாதோப்பு ஹவுசிங் போர்டு, தெற்கு கூவம் ஆறு சாலையில் உள்ள குடிசைப்பகுதி, மவுண்ட்ரோடு மசூதி பின்புறம் பச்சையம்மன் கோவில் அருகே உள்ள குடியிருப்பு மற்றும் கேசினோ தியேட்டர் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதி உள்பட பல இடங்களில் நூர்ஜஹான் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
கொய்யாத்தோப்பு ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு சிறிய ஹோட்டலுக்குப் போன அவர் அங்கு அடுக்களைக்குள் புகுந்து தானே தோசை சுடத் தொடங்கினார். மாவை ஊற்றி தோசை சுட்டு கட்சி நிர்வாகிகளுக்கும், ஹோட்டலுக்கு வந்தவர்களுக்கும் வழங்கினார்.
பிறகு வெளியே வந்த அவர் அந்தப் பகுதி தெருக்குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அடி பம்ப்பைப் பிடித்து தண்ணீர் அடித்து குடங்களை நிரப்பிக் கொடுத்தார். கூடவே, ஓட்டுக்காக நான் குடிநீர் அடித்து தர வரவில்லை. வெற்றி பெற்ற பின்னர் குடிநீர் பிரச்சினை இருக்காது. அதற்கு முன்னோட்டமாகவே இந்த பணியில் ஈடுபடுகிறேன் என்றும் பெண்களிடம் முன்ஜாக்கிரதையாக கூறினார்.
பின்னர் அப்பகுதி மக்களிடையே நூர்ஜஹான் பேசுகையில், அம்மா நகர், இந்து குடிசை பகுதி, என்.என்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் கூவம் ஆற்றுக்கு இருபுறம் மதில் சுவர் அமைத்து தருவேன். புதுப்பேட்டை கொய்யாத்தோப்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை புதுப்பித்து பொதுமக்களுக்கு வழங்குவேன். சி.என்.கே.சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து தருவேன்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு இணையான நவீன மீன் மார்க்கெட் தொகுதியில் ஏற்படுத்துவேன். துண்டு குப்பம், நடுக்குப்பம், அயோத்தி குப்பம், மாட்டாங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் மீன் மார்க்கெட் அமைத்து தருவேன். லேடி வெலிங்டன் பள்ளி புதுப்பிக்கப்பட்டு, அங்கு நவீன வசதிகள் ஏற்படுத்தி தருவேன்.
பேகம் சாகிப் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மகப்பேறு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். தேவையான அளவில் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். காவலர் குடியிருப்புகளில் சாலை வசதி செய்து தருவேன்.
தொகுதி முழுவதும் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும். பொருளாதார வசதி இல்லாத முஸ்லிம்கள் இலவசமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்வேன். ஆட்டோ-கார் உதிரி பாகங்கள் தொழிலை நம்பி உள்ளவர்களுக்காக வண்டலூர் அருகே ஆட்டோ நகர் அமைத்து தருவேன்.
எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்கள் குறைகளை தீர்ப்பேன் என்று பல வாக்குறுதிகளையும் அளித்தார் நூர்ஜஹான்.
வளர்மதி வழியில்
அமைச்சர் வளர்மதி கூட இப்படித்தான் தான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் தெருக்குழாயில் தண்ணீர் அடித்துக் கொடுத்தும், குழந்தைகளைக் குளிப்பாட்டி விட்டும் நூதனமாக வாக்கு சேகரித்தார். அதேபோல இப்போது நூர்ஜஹானும் கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.