திமுக அணிக்கு தேமுதிக போயிரவே கூடாது... இது தான் அதிமுகவின் 'கறார்' வியூகம்....
சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை திமுக தலைமையில் உருவாகும் கூட்டணி அறுவடை செய்துவிடக் கூடாது என்பதுதான் அதிமுகவின் பிரதான தேர்தல் வியூகங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக திமுகவுடன் தேமுதிக கை கோர்த்துவிட்டால் மெகா கூட்டணி உதயமாகிவிடும் என்பதால் அதைத் தடுப்பதற்கான அத்தனை வழிமுறைகளையும் கையாளுவது என்பதுதான் அதிமுகவின் முதன்மை யுக்தியாக இருக்கிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுவாக ஆளும் அரசுக்கு எதிராக இருக்கும் வாக்குகளை ஓரணியில் ஒன்று சேர விடக் கூடாது என்பதுதான் முதன்மை இலக்காக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
மெகா கூட்டணி வாய்ப்பு
தற்போதைய நிலையில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையாமல் இருந்தாலும் தேமுதிக, காங்கிரஸ் ஆகியவை அந்த அணியில் ஐக்கியமாவதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன. அதிமுகவுக்கு எதிரான பெரிய கட்சிகள் ஒன்று சேரும் போது மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் இதர சிறு கட்சிகளும் இயல்பாகவே திமுக தலைமையிலான மெகா கூட்டணியை நோக்கித்தான் நகரும்.
மெகா கூட்டணி வந்துவிட கூடாது
ஆகையால் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துவிடவே கூடாது என்பதுதான் அதிமுகவின் ஒரே அஜண்டா. இதற்காகத்தான் 'வெற்றிகரமாக' மக்கள் நலக் கூட்டணியை முதலில் அதிமுக உருவாக்கியது என்பது திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் நீண்டகால குற்றச்சாட்டு.
அங்கிட்டு இங்கிட்டு...
முடிந்தவரை தேமுதிகவை மக்கள் நலக் கூட்டணியில் சேர்த்துவிடுவது அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர்த்துவிடுவது என்பதற்கான வேலைகளில்தான் அதிமுக தீவிரமாக இருந்து வருகிறது.
தேமுதிக ப்ளான்
ஆனால் ஜல்லிக்கட்டு காளை போல தேமுதிக திமிறிக் கொண்டே இருக்கிறது... பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் 'தேசிய ஆதாயங்கள்' இருந்தாலும் மாநிலத்தில் ஒரு எம்எல்ஏ கூட ஜெயிக்க முடியாது என்பதை விஜய்காந்த் உணராமல் இல்லை. மாநிலக் கட்சியான நாம் பாஜகவோடு சேர்ந்து எதிர் கட்சிகளின் ஓட்டைப் பிரித்து அதிமுகவுக்கு உதவி செய்வதால் நமக்கு தமிழகத்தில் என்ன எதிர்காலம் இருக்கும் என்பதே விஜய்காந்தை பாடாய் படுத்தி வரும் கேள்வி
அதே போல மக்கள் நலக் கூட்டணி பக்கம் போவதால் தனக்கு ஒரு பயனும் இல்லை, இந்தக் கூட்டணி 3வது இடத்துக்குத் தான் துண்டை போட்டு வைத்துள்ளது. நாம் போய் சேருவதால் அந்த இடம் மட்டுமே இந்தக் கூட்டணிக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் பாமகவுக்கு அடுத்தபியாக 4வது இடத்துக்குப் போகும் என்பதையும் விஜய்காந்த் உணர்ந்துள்ளார்.
அதிகார சுவை
திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஒருவேளை அந்த அணி வென்றுவிட்டால் ஆட்சி அதிகாரத்தில் எளிதாக பங்கு கேட்கலாம் என்பதுதான் தேமுதிகவின் நீண்டகால திட்டமாக சொல்லப்படுகிறது. ஆனால்,இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது அதிமுக. இதனால் தான் பாஜக மூலமாக தேமுதிகவை அவர்களது கூட்டணிக்குள் தள்ளிவிடும் வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறது.
தேமுதிகவை மையமாக வைத்து
கடைசியில் திமுக- தேமுதிக கூட்டணி உருவாகிவிட்டால், வேறு வழியின்றி மக்கள் நலக் கூட்டணியில் சில கட்சிகளை தனது அணியில் அதிமுக சேர்க்கலாம். அது பிடிக்காமல் திருமாவளவன் போன்றவர்கள் திமுக பக்கம் போகலாம். தேமுதிகவுடன் காங்கிரசும் திமுக கூட்டணிக்கு போனால் ஜி.கே.வாசனை ஜெயலலிதா இழுக்கலாம். மக்களிடையே உண்மையிலேயே பழைய செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ, "தேமுதிக" என்கிற ஒரு கட்சியின் முடிவில்தான் தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணியின் அத்தனை பரபரப்புகளும் அடங்கிக் கிடக்கிறது!.
நடுத்தெருவில் பாஜக
அதே போல தேமுதிகவால் கழற்றிவிடப்பட்டால் இந்தத் தேர்தலில் நடு ரோட்டில் நிற்கப் போவது பாஜக தான். காரணம், இவர்களை ஜெயலலிதாவும் சேர்க்கத் தயாராக இல்லை. பாஜகவை சேர்த்தால் சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக திமுகவுக்கு எழுதித் தந்தது மாதிரி ஆகிவிடும் என்பதால் அதை ஜெயலலிதா விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது.