Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபையில் ஒரே நாளில் ஒட்டு மொத்த மானியக்கோரிக்கைகள் மீது விவாதம்? ஜெ. திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைக்குப் போய் ஒரு மணிநேரத்தில் வெளிநடப்போ, வெளியேற்றமோ நடப்பது என்பது நிதர்சனமான உண்மை என்றாலும் எப்போ கூட்டுவீங்க... உடனே கூட்டுங்க என்று எதிர்கட்சிகள் வலியுறுத்து வருகின்றனர்.

சிங்கம் படுத்தா எறும்பு கூட ஏறி கபடி விளையாடுமாம் அந்த கதையாக இருக்கிறது இப்போது. உடம்பு சரியில்லைன்னா ஓய்வெடுக்கலாமே என்று எதிர்கட்சித் தலைவரே பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனாலும் ஆளும் அதிமுக தரப்பில் இருந்து சட்டசபை கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் என்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ADMK govt may hold debates on all department in single day

சட்டசபை கூடினாலும் மானியக்கோரிக்கை விவாதத்தின் மீது விவாதம் நடைபெற்றாலும் 110 விதியின் கீழ் மணிக்கணக்கில் அறிக்கைவாசித்து விட்டு அவ்வளவுதான் சபை கலையலாம் என்று போய்விடுவார் ஜெயலலிதா. ஆனால் இனி மணிக்கணக்கில் நின்று கொண்டு அறிக்கை வாசிக்க உடல்நிலை ஒத்துழைப்பு கொடுக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.

தடுமாறிய அரசு

அதிமுக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இதுவரை 5 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை பெற்று சிறை சென்ற பின்னர், தமிழக அரசு இயந்திரமே முடங்கித்தான் போனது. முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றாலும் செயல்படாத முதல்வராகவே இருந்தார்.

சட்டசபை கூடலையே

எப்போ கூட்டுவீங்க எப்போ கூட்டுவீங்க என்று கேட்டதை அடுத்து சில நாட்கள் மட்டுமே சட்டசபையை கூட்டினார் ஓ.பன்னீர் செல்வம். ஆனாலும் முதல்வருக்கு உரிய நாற்காலியில் அமராமலேயே பதில் சொல்லி முடித்தார்.

பட்ஜெட் தாக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற்ற பின்னர்தான் பட்ஜெட்டை தாக்கல் செய்வது என்ற முடிவில் இருந்தார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் ஏப்ரல் மாதத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தர முடியாது, நிர்வாகச் செலவுக்குப் பணம் எடுக்க முடியாமல் போகும் என்பதால் வேறுவழியில்லாமல் மார்ச் 25ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

மானிய கோரிக்கை விவாதம்

இந்தக் கூட்டத் தொடர் 4 நாட்கள் நடைபெற்றது. அதில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இடம் பெற்றது. வழக்கமாக பட்ஜெட் மீதான பொது விவாதம் முடிந்ததும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும். ஆனால் பட்ஜெட் விவாதத்துடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை எப்போது கூடும்

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக அமர்ந்த பிறகு மானிய கோரிக்கை விவாதங்களை நடத்தலாம் என்றுதான் துறை சட்டசபையை ஒத்தி வைத்தார் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவும் மே 23ம் தேதி முதல்வர் ஆகி ஒன்றரை மாதங்கள் ஆகப் போகிறது. ஆனாலும் சட்டசபை கூடுவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

வெற்றிகரமான 100 நாட்கள்

மார்ச் 25ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் சட்டசபையை கூட்டுவதாக தெரியவில்லை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தபாடில்லை என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு.

கொடநாடு பயணம் ரத்து

ஜெயலலிதா மீண்டும் முதல்வரான கையோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் அதில் பிசியாகிவிட்டா ஜெயலலிதா. தேர்தல் முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது. எம்.எல்.ஏவாகவும் பதவியேற்றுவிட்டார் ஜெயலலிதா. அதே கையோடு கொடநாடு பயணிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் எதிர்கட்சியினர், சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. இதனையடுத்து கொடநாடு பயணம் ரத்து செய்யப்பட்டது.

முடங்கிய அரசு

அரசியல் சாசனச் சட்டப்படி, மாநில அரசுகள் முறைப்படி மானிய கோரிக்கைகளை சட்டசபையில் நிறைவேற்றினால்தான் ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் தெரியும். அத்துடன் புதிய அறிவிப்புகள் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும். இந்த மானிய கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றாமல் வைத்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கிப் போய்விட்டது என்பதும் எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டாகும்.

ஒத்துழைக்காத உடல்நிலை

மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்த எப்படியும் 2 மாதங்கள் வரை தேவைப்படும். ஆனால் அதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. காரணம் பதவியேற்பு நிகழ்ச்சியையே அரை மணிநேரத்தில் முடித்துவிட்டார் ஜெயலலிதா.

பதில் சொல்வாரா ஜெ

சட்டசபையில் எதிர்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு புள்ளிவிபரங்களுடன் பதில் சொல்வார் ஜெயலலிதா. இம்முறை சட்டசபையில் பதில் சொல்லக்கூடிய நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே நாளில் முடிக்க திட்டம்

எனவே ஒட்டு​மொத்தமாக மொத்த துறைகளின் மானிய கோரிக்கைகளையும் ஒரே நாளில் நடத்திவிடவும் முடிவு செய்திருக்கிறார்களாம். ஏற்கனவே இதேபோல அதிமுக ஆட்சி காலத்தில் பொன்னையன் முதல்வராக இருந்த போதும் இதேபோல ஒரே நாளில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புயலை கிளப்பத் திட்டம்

எது எப்படியோ சட்டசபை கூட்டத் தொடரில் அதிமுக அரசுக்கு எதிராக புயலைக் கிளப்ப திமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்கட்சியினரை சமாளிக்க சரியான பதில்களைத் தர தயாராகி வருகிறார் ஜெயலலிதா என்கின்றனர் ஆளும் கட்சியினர் புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்றும் கூறுகின்றனர். இப்படி ஒரேடியாக பதுங்கினாலும் அரசே செயலிழந்து விடுமே என்பதுதான் மக்களின் கவலையாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+