ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த அத்யாயம்... வருகிறது டிசம்பர் 17
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று அக்டோபர் 17ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 17ம் தேதியை நோக்கித்தான் முழுக் காவனமும்.
ஏனெனில் அன்றைய தினத்துக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. எனவே அது தொடர்பான செயல்பாடுகளில் கவனம் இருந்தாலும், கட்சியிலும் ஆட்சியிலும் சில அதிரடி உத்தரவுகளையும் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா.
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபைக்கு வருகிறார் என்றாலே அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வரிசைகட்டி நிற்பார்கள் வரவேற்க. அது மரியாதையாதையா, பயமா? அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
அவர் பதவியிழந்த பின்னர் கூடிய முதல் சட்டசபை கூட்டத்தொடரில் அத்தகைய நிகழ்வை காணமுடியவில்லை. சாதாரண சட்டசபையாகவே அது இருந்தது. முதல்வர் பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூட சட்டசபையில் அமைச்சர்களோடு அமைச்சராய்தான் அமர்ந்திருக்கிறார். சபையை எப்படி நடத்த வேண்டும், என்ன பேசவேண்டும் என்று ஆலோசனை கொடுத்து அனுப்பியிருந்தாலும் ஜெயலலிதா இல்லாத சட்டசபையில் அமைதியே நிலவியது.

வீட்டில் 'சிறைவாசம்'
அக்டோபர் 18ம் தேதி சென்னை திரும்பியதில் இருந்து போயஸ் கார்டனில் 'சிறைவாசம்' இருக்கும் ஜெயலலிதா அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தியை ஒட்டி வீட்டில் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் மூலம் அதிமுகவினர் ஜெயலலிதாவை 'பார்த்தது' ஆறுதல் பட்டுக்கொண்டனர். மற்றபடி வெளியில் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை, யாரையும் சந்தித்த படங்களும் வெளியே வரவில்லை.
எதிர்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் இந்த நேரத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் ஜெயலலிதா சும்மா இருப்பதுதான் அவருக்கு மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.

சட்டமன்றத்தில் 110
சட்டமன்றம் நடக்கும் நேரமாக இருந்தால் அதற்கான உரைகளைத் தயாரிப்பதில் தொடங்கி, 110 அறிக்கை தயாரிப்பது வரை தினமும் பரபரப்பாக இருப்பார் ஜெயலலிதா. அத்தனை துறைகளுக்கும் அமைச்சர்கள் எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு அசராமல் பதிலளிப்பார். மணிக்கணக்கில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசிப்பார். இப்போதோ அந்த காட்சி இருக்காது என்பது எதிர்கட்சிகளுக்கு ஆறுதல்.

அறிவுரைகள் நிறைய!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை வகித்து வந்த அவை முன்னவர் பொறுப்பு அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குத் தரப்பட்டுள்ளது. இவர்களுடன் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோரையும் வரவழைத்து ஐவரையும் ஒரே நேரத்தில் சந்தித்துள்ளார். கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த வேண்டிய முக்கியப் பொறுப்பை இந்த ஐந்து பேரிடம் ஒப்படைத்துள்ளார் ஜெயலலிதா.

தனது உத்தரவை பின்பற்றுங்கள்
தன்னிடம் இருந்து வரும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் ஆணை. ஏனெனில், கட்சியிலும் ஆட்சியிலும் வேறு யாருடைய தலையீடும் ஆதிக்கமும் இருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை.
ஆட்சியையை மறைமுகமாக நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் இப்போதைய கவனம் எல்லாம் டிசம்பர் 17ம் தேதியை நோக்கியே உள்ளது.

மேல்முறையீடு
அதற்கு முன்புதான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கான மேல்முறையீட்டு மனுவை, அவர் தாக்கல் செய்ய வேண்டும். ஜாமீனில் வந்ததுமே தீர்ப்பின் நகலை 10-க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்களுக்குக் கொடுத்து அவர்களது ஆலோசனைகளை பெற்றுள்ளாராம் ஜெயலலிதா.

தயாராகும் ஜெ
மேல்முறையீட்டு மனுவில் என்ன மாதிரியான வாதங்களை வைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சொல்லியுள்ள ஆலோசனைப்படி மனு தயாராகியுள்ளது. இதையொட்டி வழக்கறிஞர்களை மட்டுமே அவ்வப்போது சந்தித்து வருகிறார் ஜெயலலிதா.

வழக்கு முடியும் வரை
உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி மூன்று மாதங்களுக்குள் இந்த விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்றம் முடிக்குமானால், அது கயிற்றின் மேல் நடக்கும் விஷயம் என்பதை உணர்ந்ததால்தான் ஜெயலலிதா ஜாக்கிரதையாக இருக்கிறார். அது வரை வெளியில் கட்சி நிகழ்ச்சிகளில் முகத்தைக் காட்டும் திட்டம் அவருக்கு இல்லை என்கின்றனர்.

அவர் வருவாரா?
அ.தி.மு.க கட்சி விதிமுறைப்படி ஆண்டுக்கு ஒருமுறை கட்சியின் பொதுக்குழு கூட்டியாக வேண்டும். அதன்படி டிசம்பர் மத்தியில் அ.தி.மு.க பொதுக்குழு கூட வேண்டும். பொதுக்குழுவை தள்ளிப் போடவும் முடியாது. பொதுக்குழு கூடினால் ஜெயலலிதா நிச்சயம் பங்கேற்றே ஆக வேண்டும். அவர் வருவாரா என்கிற கேள்விக்கு பதிலில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியுமா என்ற கேள்வியும் அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆர் நினைவுநாள்
டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தன்று எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஆண்டுதோறும் பங்கேற்பார். இந்த ஆண்டு அதில் பங்கேற்பாரா?

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்
அதன்பின் ஜனவரி 17ம் தேதியன்று எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் தலைமைக் கழகம் வந்து, பிறந்த நாள் மலரை வெளியிட்டு, தொண்டர்களுக்கு லட்டு வழங்குவது ஜெயலலிதாவின் வாடிக்கை.
பொதுக்குழு, எம்.ஜி.ஆர். நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஜெயலலிதா வருவாரா... மாட்டாரா? என்பது தெரியவில்லை.

யாகம், வேண்டுதல்
அதேசமயம் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகவும், நிரந்தர விடுதலைக்காகவும் ஆலயங்களில் அ.தி.மு.க-வினர் யாகம், தேர் இழுத்தல், வேண்டுதல் செய்வது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

ஜெயா டிவியில்
இதனால் இந்தப் படங்களை கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் 'நமது எம்.ஜி.ஆர்' நிச்சயம் வெளியிட வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளதாம். அதேபோல், ஜெயா டி.வியில் மக்களின் முதல்வர் என்று மூச்சுக்கு 300 முறை அடைமொழியோடு செய்தியும் ஒளிபரப்பாகிறது.

ஆறுதல் செய்தி
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வருமானவரி வழக்கில் இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கிலும் அப்படி ஏதாவது அதிசயம் நடக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் ஜெயலலிதாவும் சசிகலாவும்!












Click it and Unblock the Notifications