தீட்சிதர்களுக்கு எதிராக பிரசாரமா பண்றே... தொழிலாளரைத் தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ.
புதுச்சேரி: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் கொடுத்துப் பிரசாரம் செய்தவர்களை புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ ஓம் சக்தி சேகர் சரமாரியாக அடித்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயிலான நடராஜர் கோயில் 2009 ஆம் ஆண்டில் அரசுடமையாக்கப்பட்டு இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மேலும், இக்கோயிலில் தேவாரம் பாடுவது தடை செய்யப்பட்டு வந்தது. பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே சிவனடியார் ஆறுமுகசாமி தேவாரம் பாடி வருகிறார்.
ஆறுமுகச்சாமியை சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் பலமுறை தாக்கியுள்ளனர். இவர்களைக் கேட்க நாதியே இல்லாத நிலை நிலவுகிறது. எத்தனை முறை தேவாரம் பாடினாலும் தாக்கி அடித்து விரட்டுகிறார்கள். நடராஜர் கோவில் தீட்சிதர்களின் தனிச் சொத்து போல மாறி விட்டது.
இந்நிலையில் அரசுடமையாக்கப்பட்ட பின் கோயிலின் வருமானம் கோடிகளை தொட்டுள்ளது. தற்போது நடராஜர் கோயிலை மீண்டும் கைப்பற்ற தீ்ட்சிதர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தமிழக அரசிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகவே நடந்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக ஜனதா கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ.கவில் ஐக்கியமாகி விட்ட சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை புதுச்சேரியின் முக்கிய சந்திப்பான ராஜீவ் காந்தி சிக்னல் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் ஐந்து பேர், அரசுடமையாக்கப்பட்ட நடராஜர் கோயில் மீண்டும் தீட்சிதர் கைகளுக்கு செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு திடீரென வந்த நெல்லித்தோப்பு அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர், பிரசாரம் செய்து கொண்டிருந்த தொண்டர்களை சரமாரியாக தாக்கினார். கழுத்தைப் பிடித்து இழுத்தும், சட்டையை கிழித்தும், பாக்கெட்டில் இருந்ததுப் பறித்தும் அராஜகமாக ரவுடி போல நடந்து கொண்டார்.
அதில், இருவர் தப்பியோடிவிட மூன்றுபேரை மட்டும் உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் கொண்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ தரப்பில் கூறுகையில், தமிழக முதல்வரை அவதூறாக பேசியதால் நாங்கள் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம் என்றனர்.