கூவத்தூர் டைரிக் குறிப்பு.. அட அட.. அதிமுக எம்.எல்.ஏக்களின் "ஆகாகாகா" கொண்டாட்டம்!
கூவத்தூர் ரிசார்ட்சில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறார்களாம்.
சென்னை: (கவுண்டமணி ஸ்டைலில்) பொறந்தா ஒரு எம்.எல்.ஏவா பொறக்கனும், இல்லாட்டி ஒரு எம்.பியா பொறக்கனும்.. அதுவும் இல்லையா, ஒரு கவுன்சிலராவாவது பொறக்கனும். என்னா வாழ்க்கைடா சாமி.. (கட்) இப்படித்தான் அதிமுக எம்.எல்.ஏக்களைப் பார்த்து மக்கள் பொறாமையில் வாய் பிளந்து நிற்கின்றனர். இருக்காதா பின்னே.. கோல்டன் பே ரிசார்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் அப்படிக் கவனிக்கிறார்களாம் எம்.எல்.ஏக்களை.
வெளியில் என்ன நடக்கிறது என்று சுத்தமாக தெரியாவிட்டாலும் கூட தரப்படும் வசதிகளையும், சந்தோஷங்களையும், ஜாலிகளையும் மிச்சம் வைக்காமல் அனுபவித்துத் தள்ளுகிறார்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள் என்று அங்கிருந்து நைஸாக கசிந்து ஓடி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேட்டது கிடைக்கிறதாம்.. சில சமயம் அது வேண்டும்.. இது வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் கேட்டு அடம் பிடித்த கூத்துக்களையும் ரிசார்ட் ஊழியர்கள் பார்த்து தலை குழம்பிப்போய்க் கிடக்கிறார்களாம்.
கூவத்தூர் கூத்து
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களை அப்படியே கொத்தாக பஸ்களில் போட்டுக் கொண்டு போய் இந்த ரிசார்ட்டில்தான் இறக்கி பத்திரமாக அடைத்து வைத்துள்ளனர். வேளா வேளைக்கு சாப்பாடி உள்ளிட்டவை தரப்படுகிறதாம். கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் கிராமத்தில்தான் இந்த கோல்டன் பே ரிசார்ட்ஸ் உள்ளது. அந்தப் பகுதியே கடந்த 2 நாட்களாக அல்லோகல்லப்பட்டுப் போய்க் கிடக்கிறது.
அமைச்சர்கள் பாதுகாப்பில்
பலத்த பாதுகாப்புடன் சிறைக் கைதிகள் போல இவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டு அதைச் செய்து கொடுக்கும் பொறுப்பை அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், நடிகர் கருணாஸ் ஆகியோர் கொண்ட படையே களத்தில் உள்ளதாம். இவர்கள்தான் தேவை அறிந்து செய்து கொடுத்தவர்களாம்.
பங்காளி அது வேண்டும்..!
இதில் சில எம்.எல்.ஏக்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று அடம் பிடித்துக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு குதூகலித்தார்களாம். நாள் கிழமை பார்க்காமல் நேற்றும் இன்றும் அசைவ வகை உணவுகள் அலை புரண்டு ஓடி ஓடி எம்.எல்.ஏக்களை குஷிப்படுத்தியதாம்.
இன்னிசை மழை
வயிற்றுக்கு தேவையானது போனதும் இரவில் இன்னிசை விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனராம். விடிய விடிய நடந்த இசைக் கச்சேரியை எம்.எல்.ஏக்கள் கூடி ஆரவாரமாக கண்டு களித்தனராம். பலர் உற்சாகம் ஜாஸ்தியாகி களத்தில் இறங்கி கூட மாட ஆடியும் குதூகலித்தார்களாம்.
கண்ணைக் கட்டி சொர்க்கத்தில் விட்ட கதை!
டிவி கிடையாது, செல்போன் கிடையாது, பேஸ்புக் கிடையாது, நியூஸ் கிடையாது, நியூஸ் பேப்பர் கிடையாது.. என வெளியுலக விஷயங்களை முழுமையாக இவர்களுக்குத் தடை செய்து விட்டு அதைத் தவிர மற்ற அத்தனை சந்தோஷங்களையும் காட்டியுள்ளனர். அதாவது கண்ணைக் கட்டி சொர்கத்தில் இறக்கி விட்ட கதைதான்.
வாருங்கள் எல்லோரும் வாக்கிங் போவோம்!
இன்று காலை செல்லூர் ராஜு தலைமையில் சில எம்.எல்.ஏக்கள் ரிசார்ட் உள்ளேயே வாக்கிங் போன கதையும் நடந்ததாம். வாக்கிங் வெளியில் போக முடியாது. உள்ளேயேதான் என்று கூறப்பட்டதால் இவர்களின் நடையில் சற்று சுரத்து குறைந்து காணப்பட்டதாம்.
கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன்.. நீயும் வரப்படாது!
இந்த எம்.எல்.ஏக்கள் "கொண்டாட்ட புத்துணர்ச்சி முகாமுக்கு"த் தேவையான பாதுகாப்பை மன்னார்குடி, தஞ்சாவூரிலிருந்து கூட்டி வரப்பட்ட கூட்டம்தான் கவனித்துக் கொண்டுள்ளது. யாரையும் - அது உள்ளூர் கிராமத்தினராகவே இருந்தாலும் கூட விடுவதில்லை. மீறி வந்தால் போய்ரு என்று கூறி மிரட்டி அனுப்பி வைக்கிறார்களாம்.