ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதிமுக கிளைச்செயலாளர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி செல்போன் டவர் மீது அதிமுக கிளைச்செயலாளர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முதல்வர் எடப்பாடியார் செல்லும் வழியில் அதிமுக கிளைச்செயலாளர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்ல இருக்கிறார். காலை 10.30 மணியளவில் தூத்துகுடி வந்து சேர வேண்டிய விமானம் இன்று தாமதமாகி உள்ளது.

விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் மைதானத்திற்கு செல்லும் வழியில் போலீஸார் குவிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், முதல்வர் வரும் வழியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் தங்கபாண்டியன் என்பவர் போராட்டம் நடத்தி வருகிறார்.
இவர் அதிமுக கிளைச்செயலாளராக இருந்துவருகிறார். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார் தங்கபாண்டியன்.
முதல்வரிடம் அழைத்துச்சென்று மனுக்கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்று போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். ஆனால், தங்கபாண்டியனோ ஆலையை மூட நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடும் செய்தி வெளியான பின்பு தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் அதிமுகவிற்கு மக்களிடையே அவப்பெயர் எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். முதல்வர் வரும் வழியில் அதிமுக கிளைச்செயலாளர் ஒருவரே செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திவருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications