5 மீனவர்களுக்கு தூக்கு: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
சென்னை: இலங்கையில் தூக்கு விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் வழக்கறிஞர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு, மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர், அவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, இலங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீனவர்களின் மேல்முறையீட்டு செலவிற்காக தமிழக அரசு 20 லட்சம் ரூபாயை ஒதுக்கி, அதை, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பியது.
வழக்கறிஞர்கள் போராட்டம்
இதனிடையே மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிரான பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
இனவெறி அரசு
சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக போராடுவோம் என்று முழக்கமிட்ட வழக்கறிஞர்கள், இலங்கையின் விசாரணை அதிகாரிகளை கைது செய்து சிறையிலடைக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்றங்களை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்றைய தினம் நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.