அரசியல் ஆழம் தெரியாமல் காலை விட்டாரா விஷால்... போட்டியிட முடிவு செய்ததும் என்ன செய்திருக்க வேண்டும்
அரசியல் களம் என்ன என்று தெரியாமல் விஷால் களமிறங்கியதால் தான் அவர் சறுக்கலை சந்தித்துள்ளாரா என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
Recommended Video
சென்னை : அரசியல் களம் என்ன என்பது தெரியாமல், போட்டியிடுவதாக அறிவித்த 2வது நாளில் வேட்பு மனு தாக்கல் அடுத்த நாளே மனு நிராகரிப்பு என்று விஷாலின் அரசியல் பாதை சற்று சறுக்கியுள்ளது. ஆழம் தெரியாமல் விஷால் காலை விட்டது தான் இந்த சறுக்கலுக்குக் காரணமா?
அரசியல் பரமபதத்தில் தொடக்கத்திலேயே விஷால் சறுக்கலை சந்தித்துள்ளார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று திரைத்துறை சார்ந்த தேர்தல்களில் திடீரென களமிறங்கினாலும் முதல் போட்டியே அவருக்கு வெற்றிக்கனியை பறித்துத் தந்தது. இதே போன்று அரசியலிலும் ஒரு ரவுண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆர்கே நகரில் போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு.
ஆனால் சுயேச்சையாக களமிறங்குவதாக அறிவித்த இரண்டே நாளில் வேட்பு மனு தாக்கல் என்று தேனீ போல சுற்றி சுழன்றடித்தார். வேட்பு மனு பரிசீலனையில் அவருக்கு பல டுவிஸ்டுகள் காத்திருந்தன. திரைப்பட நடிகர் என்பதாலோ என்னவோ, அவருடைய வேட்பு மனு பரிசீலனையும் எதிர்பாராத பல திருப்பங்களை தந்தது.
விறு விறு
வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைப்பு, பின்னர் நிராகரிப்பை எதிர்த்து விஷால் மறியல். முன்மொழிந்த வேட்பாளர்கள் மிரட்டப்பட்ட ஆடியோ வெளியீடு, 2வது முறையாக மீண்டும் மனு பரிசீலனை, மனு ஏற்கப்பட்டதாக சொன்ன விஷால். வீடு திரும்புவதற்குள் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு க்ளைமாக்ஸ் காட்சி விஷாலுக்கு சோகத்தில் முடிந்தது.
தயாராக இருந்திருக்க வேண்டும்
அரசியல் களத்திற்கு வருவதாக முடிவு செய்த விஷால் என்ன செய்திருந்தால், இந்த தடுமாற்றத்தை தவிர்த்திருக்கலாம்? மூத்த அரசியல்வாதிகள் தரும் டிப்ஸ் இதோ. வேட்புமனுதாக்கல் செய்வது என்பதை முடிவு செய்தவுடன், இது குறித்து நல்ல அனுபவமுள்ளவர்களிடம் கேட்டறிந்திருக்கவேண்டும்.
வேட்புமனுவில் எதை எங்கு குறிப்பிடவேண்டும், எதை தவிர்த்திருக்கவேண்டும். எங்கு என்ன சொல்லியிருக்கவேண்டும் என்பதை தயார் செய்திருக்கவேண்டும்.
எதிர்ப்பு வரும் என்று அறிந்திருக்க வேண்டும்
அதேபோல், வேட்பு மனுவில் என்ன தவறு உள்ளது என்பதை ஆளும் கட்சி, எதிர்கட்சி, சுயேச்சைகள் என அனைவரும் புகாராக பதிய வாய்ப்புள்ளது. எனவே இதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதற்கு தயாராகியிருக்க வேண்டும்.
தொடக்கமே தோல்வியா?
அதேபோல், தேர்தல் நடக்கும் தொகுதியைச் சேர்ந்தவர்கள் வேட்புமனுவை முன்மொழியவேண்டும். இதில்தான் விஷால் முற்றிலும் தோற்றுப்போயுள்ளார். உறுதியான 10 பேரை முன்கூட்டியே தயார் செய்து அவர்களுடைய கையொப்பம் பெற்றிருக்கவேண்டும். தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடக்கம் தான். அதில் விஷால் எடுத்து வைத்த முதல் அடியே தோல்வியைத் தந்துள்ளது.