ஜெ பங்களா, ஜெ. நாற்காலி, கார், கட்சி.. அடுத்தடுத்து கபளீகரம் செய்யும் சசிகலா!
ஜெயலலிதாவுக்கு சொந்தமானவற்றை அடுத்தடுத்து கபளீகரம் செய்து வருகிறார் சசிகலா. ஜெ. பங்களா, கார், கட்சி என ஆக்கிரமிக்கும் சசிகலா ஆர்கே நகர் தொகுதியையும் விட்டு வைக்கமாட்டார் என்கின்றனர்.
சென்னை: ஜெயலலிதா பங்களா, நாற்காலி, கார், கட்சி என அவருக்கு சொந்தமான அத்தனையையும் அடுத்தடுத்து கபளீகரம் செய்து வருகிறார் சசிகலா. தற்போது ஜெயலலிதா வகித்த முதல்வர் பதவி நாற்காலிக்கும் குறிவைத்துள்ள சசிகலா ஜெ. போட்டியிட்ட ஆர்கே நகர் தொகுதியிலும் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது போயஸ் கார்டன் பங்களாவில்தான் சசிகலா இருந்து வருகிறார். இந்த பங்களா சசிகலாவுக்குதான் என ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளாரா? இல்லையா என்பது தெரியவில்லை.
ஒருவர் மறைவுக்கு பின்னர் அவரது உடைமைகள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்குத்தான் போக வேண்டும். ஆனால் சசிகலாவோ தொடர்ந்து போயஸ் கார்டனை ஆக்கிரமித்து வருகிறார். அவரது மன்னார்குடி உறவுகளும் அங்குதான் முகாமிட்டுள்ளன.
பங்களா, நாற்காலி....
அத்துடன் போயஸ் கார்டன் பங்களாவில் ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியிலேயே அமர்ந்து தம்மை சந்திக்க வருபவர்களிடம் பேசுகிறார் சசிகலா. போயஸ் கார்டன் பங்களா, அடுத்தது நாற்காலி என சசிகலா கபளீகரம் செய்ததை அதிமுக தொண்டர்களால் ஏற்க முடியவில்லை. இதனால் போயஸ் கார்டன் பங்களாவை விட்டு சசிகலாவே வெளியேறு! எங்கம்மா உட்கார்ந்த நாற்காலியில் இவர் யார் உட்கார? என்ற குரல்களும் வெடித்தது.
ஜெ.வின் பொதுச்செயலர் பதவி
இதன்பின்னர் ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதனடிப்படையில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலர் பதவியும் சசிகலா வசமானது.
ஜெ. காரில்...
இப்பதவியை ஏற்க அதிமுக தலைமை நிலைமையம் வந்த சசிகலா ஜெயலலிதா காரில்தான் வந்தார். ஜெயலலிதாவைப் போலவே காரின் முன் இருக்கையில் அமர்ந்து வந்தார் சசிகலா.
டூப்ளிகேட் ஜெயலலிதா
அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் அறையில் ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியிலேயே சசிகலாவும் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இதையெல்லாம் கூட சகித்துக் கொண்டார்கள் அதிமுக தொண்டர்கள்.
ஆர்கே நகர் தொகுதியையும்?
ஆனால் உடை, சிகை அலங்காரம், கும்பிடு, அய்யங்கார் நாமம் என செயற்கைத்தனமான டூப்ளிகேட் ஜெயலலிதாவாக சசிகலா காட்சி தருவதைத் தான் காண சகிக்க முடியாதவர்களாக அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதியையும் விட்டு வைக்காமல் அங்குதான் போட்டியிடுவேன் என சசிகலா அடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.