புலி கூட பயமில்லை, ஆனால் இந்தக் குரங்கு தொல்லைதான் தாங்க முடியலை... வண்டலூர் வாசிகள் புலம்பல்!
சென்னை: வண்டலூர் அருகே குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்டவர்கள் குரங்கு கடிக்கு ஆளாகி இருப்பதாகவும், அட்டகாசம் செய்யும் குரங்குகளை விரைந்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் மிகப் பெரிய வனப்பகுதியும், அதனை ஒட்டி உயிரியல் பூங்காவும் அமைந்துள்ளது. எனவே, அவ்வப்போது வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறும் விலங்குகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாகி உள்ளது.
சமீபத்தில் கூட புலி ஒன்று வெளியேறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு பெரும் பீதிக்குள்ளாகி விட்டார்கள் மக்கள்.
இந்நிலையில், வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் கிராமத்துக்கு உட்பட்ட 13-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் திருவள்ளூர் தெரு, தந்தை பெரியார் தெரு, அம்பேத்கர் தெரு, அன்னை தெரசா தெரு, வ.உ.சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக 200க்கும் மேற்பட்ட குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் குரங்குகள் மளிகைக் கடைகளில் உள்ள முட்டை, பால் பாக்கெட், பிஸ்கட் போன்றவற்றையும், வீடுகளில் புகுந்து அரிசி, பருப்பு மற்றும் சாப்பாடு போன்றவற்றையும் அள்ளிச் சென்று விடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஓட்டு வீடுகளின் மேல் அமர்ந்து ஓடுகளை வீசி எறிவதாகவும், மின் விளக்குகளை உடைப்பதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும், இதுவரை 30க்கும் மேற்பட்டவர்களை குரங்குகள் கடித்துள்ளதாகவும், இதனால் இரவு, பகல் என எப்போதும் கையில் தடியுடன் நடமாட வேண்டி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். வியாபாரிகளும் கடையை மூடி வைத்தே வியாபாரம் செய்து வருகின்றனர்.
அட்டகாசம் செய்யும் குரங்குகளை விரைந்து பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.