ரமணா பட ஸ்டைலில் இறந்த உடலுக்கு சிகிச்சை... நெல்லை மருத்துவமனை மீது புகார்
நெல்லை: இறந்த கல்லூரி மாணவி உடலை வைத்துக் கொண்டு ரமணா திரைப்பட பாணியில் சிகிச்சை செய்து பணம் பறித்து விட்டதாக நெல்லையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவரது மகள் காந்திமதி, 20. வண்ணார்பேட்டை தனியார் என்ஜீனியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்றுவந்தார். தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அவர் விஷம் குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜூலை 1ம் தேதி இரவில் வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். உடல்நிலையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பெற்றோர், மதுரை தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்லலாம் என கூறி அங்கிருந்து ஆம்புலன்சை வரவழைத்தனர்.
ஆனால் ஆம்புலன்சில் வந்த மருத்துவ பிரிவினர், காந்திமதியின் உடலை சோதித்து பார்த்துவிட்டு அவர் இறந்து நீண்ட நேரமாகிறது. நாங்கள் எடுத்துச் செல்ல முடியாது என கூறிவிட்டு சென்றனர். இதற்கிடையே இறந்ததாக கூறப்படும் நேரத்திற்கு பிறகும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு மருந்துகள், உபகரணங்களை மெடிக்கலில் இருந்து வாங்கி கொடுத்துள்ளனர். எனவே மாணவியின் உறவினர்கள், அவரது உடலை தரக்கோரியும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை கோரியும் இரவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இறந்துபோன மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மறுநாள் நெல்லை கலெக்டரிடமும் மனுகொடுத்தனர். "ரமணா' சினிமா படத்தில் வருவதை போல பணம் பறிக்கும் வண்ணார்பேட்டை ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனையைக் கண்டித்தும், அதன் நிர்வாகிகள், மூன்று டாக்டர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்டோர் மீது மோசடி, மருத்துவ விதிமுறைகளுக்கு விரோதமாக நடந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யுமாறு கலெக்டரிடம் புகார் மனுகொடுத்தனர். இருப்பினும் பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்யவோ, விசாரணை நடத்தவோ முன்வரவில்லை.
எனவே ஒரு மாத காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு வழக்குபதிவும் செய்யாததால் நேற்று நெல்லையில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் கட்சியினர் மற்றும் மாணவியின் பெற்றோர், வண்ணார்பேட்டையில் இருந்து ஊர்வலமாக ரோஸ்மேரி மருத்துவமனை நோக்கி சென்றனர். அவர்களை மேம்பாலம் அருகே போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். இதனால் வண்ணார்பேட்டை ரோஸ்மேரி மருத்துவமனை முன்பாக பரபரப்பு ஏற்பட்டது.