திமுகவுக்கு பதிலடி.. நெஞ்சை பிழியும் சென்டிமென்ட் விளம்பரங்களோடு கோதாவில் குதித்த அதிமுக!
சென்னை: 'சொன்னீங்களே, செஞ்சீங்களா' என்ற பெயரில் விளம்பர யுத்தம் தொடங்கிய திமுகவுக்கு பதிலடி தரும்வகையில், உருக்கமான விளம்பரங்களை களமிறக்கியுள்ளது அதிமுக.
2011 சட்டசபை தேர்தலின்போது, நீங்கள் செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா.. என வாக்காளர்களை பார்த்து கேள்வி எழுப்பி வாக்குகளை ஈட்டினார் ஜெயலலிதா.
இப்போது 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், இதே வார்த்தையை வைத்து ஜெயலலிதாவை அட்டாக் செய்யும் விளம்பரங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தது திமுக.
சொன்னீங்களே
"சொன்னீங்களே, செஞ்சீங்களா" என்ற சொற்தொடருடன் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளும், அவை நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனமும் அந்த விளம்பரங்களில் இடம்பெற்றிருந்தன.
புகார்
இந்த வகை விளம்பரத்தின் வீச்சு அதிகமாக இருப்பதை உணர்ந்த அதிமுக, முதல்வர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுகவின் விளம்பரங்கள் இருப்பதாக கூறி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
திமுகவில் மாற்றம்
இதையடுத்து திமுக தற்போது தங்களது வாக்குறுதிகளை கொண்ட விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறது. ஸ்டாலின் முதலில் பேச, சொன்னதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று கருணாநிதி முடித்து வைக்கிறார் அந்த விளம்பரங்களில்.
அனைத்து சேனல்களிலும்
இந்நிலையில், பதிலடியாக அதிமுக தனது விளம்பரங்களை களமிறக்கியுள்ளது. ஜெயா டிவி குழுமத்தை சேர்ந்த சேனல்களில் மட்டுமல்லாது, புதியதலைமுறை உள்ளிட்ட வேறு பல பொதுவான சேனல்களிலும், இந்த விளம்பரங்களை பார்க்க முடிகிறது.
ஏழை பெண்கள்
இந்த விளம்பரங்களில் பெரும்பாலும் ஏழை பெண்கள் போன்ற தோற்றம் கொண்டவர்கள், தங்களது குடும்பம் வறுமையால் பாதிக்கப்பட்டதாகவும், ஜெயலலிதா ஆட்சியில் ஓரளவு முன்னேறியுள்ளதாகவும் நெஞ்சை உருக்கும் வகையில் பேசுகிறார்கள்.
ஆடு, பசுக்கள்
இலவச பசு மாடு தந்ததால் பால் கறந்து பிழைத்துக் கொண்டதாகவும், இலவச ஆடு தந்ததால் தற்சார்பு அடைந்ததாகவும், பெண்கள் நெஞ்சை உருக்கும் வகையில் பேசுகிறார்கள். நெஞ்சை இளகச் செய்யும் பின்னணி மியூசிக் இந்த வகை விளம்பரங்களின் கூடுதல் பலம்.
மாற்றுத்திறனாளியின் உருக்கம்
மாற்றுத்திறனாளி ஒருவர் இலவச மோட்டார் சைக்கிள் காரணமாக தன்னால் டீக்கடை வைத்து பிழைப்பு நடத்த முடிவதாக உருக்கமாக பேசுவதை போன்ற விளம்பரமும் ஒளிபரப்பாவதை பார்க்க முடிகிறது. ஏழை, எளிய மக்களை குறிவைத்தே அதிமுகவின் விளம்பரங்கள் களமிறக்கப்பட்டுள்ளதை விளம்பரங்களை பார்ப்போரால் புரிந்து கொள்ள முடியும்.
உயரட்டும் சிகரத்தை நோக்கி
இவ்விளம்பரங்களின் இறுதியில், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பது போன்ற ஜெயலலிதாவின் பிரசார வாசகம் ஒலிக்கிறது. தொடரட்டும் அம்மாவின் பொற்கால ஆட்சி, உயரட்டும் தமிழகம் சிகரத்தை நோக்கி.. என்பது போன்ற வார்த்தைகளை கொண்டு விளம்பரங்களை முடிக்கிறார்கள்.