கோஷ்டி பூசலில் ஆர்.கே.நகர் அதிமுக.. தர்ம சங்கடத்தில் சிக்கிய 'அம்மா'
சென்னை: அதிமுக கோஷ்டி பூசல் காரணமாக, ஆர்.கே.நகர் தொகுதியில் 'அம்மா'வுக்கு தர்ம சங்கடமாகியுள்ளதாக சொல்கிறார்கள் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள்.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். தொடர்ந்து 3வது முறையாக அதிமுக வசம் வந்ததால் இத்தொகுதி அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது.
ஹாட்ரிக் வெற்றி
சேகர்பாபு அடுத்தடுத்து இருமுறை, வெற்றிவேல் ஒருமுறை என தொடர்ந்து மூன்று முறை வெற்றியை ருசித்த அதிமுக தற்போது ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த முன்னேற்றமும் கிடையாது என்கின்றனர் தொகுதிவாசிகள்.
அவல நகர்
ஆர்.கே.நகர் தொகுதியில், கஞ்சா விற்பனை, போதை ஊசி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் ஜரூராக நடக்கின்றனவாம். ரவுடிகளின் தலைமறைவு பிரதேசமாகவும் ஆர்.கே.நகர் பரிணமிக்கிறதாம். இது ஒருபக்கம் மக்களை அச்சுறுத்தி வந்தால், அடிப்படை வசதிகளும் அத்தொகுதியில் செய்யப்படவில்லை. குறிப்பாக, கடந்த நான்காண்டு கால அதிமுக ஆட்சியில் ஆர்.கே.நகர் அவல நகராகத்தான் காட்சியளிக்கிறது.
வெற்றிவேலிடம் விசாரணை
இதனால் தொகுதி மக்கள் அதிருப்தியிலுள்ள தகவல், தற்போதுதான் தலைமைக்கு சென்றுள்ளது.
இது சம்பந்தமாக தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இதுவரை இருந்து வந்த வெற்றிவேலிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர, மேயர் சைதை துரைசாமி மீது பழிபோட்டு தப்பிவிட்டதாக சொல்கிறார்கள். ஏனெனில் சைதை துரைசாமிக்கு எதிர் கோஷ்டியான ஜெயக்குமார் குரூப்பை சேர்ந்தவர் வெற்றிவேல் என்று கூறப்படுகிறது. இதை காரணமாக வைத்துதான், தனது தொகுதிக்கு மாநகராட்சியில் இருந்து எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று வெற்றிவேல் அப்பாவியாய் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைதை தரப்பு எஸ்கேப்
வெற்றிவேல் குற்றச்சாட்டு குறித்து, சைதை துரைசாமியிடம் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. துரைசாமி தரப்பினரோ, வெற்றிவேல் மீது ஒரு குற்றச்சாட்டு பட்டியலையே வாசித்துவிட்டனராம். வெற்றிவேல் இந்தத் தொகுதியிலேயே குடியிருக்கவில்லை. கீழ்ப்பாக்கத்தில் குடியிருக்கிறார். அவர் எப்படி ஆர்.கே.நகரை கவனித்திருக்க முடியும்.. அவர் அண்ணா நகரில் கவுன்சிலராக இருந்தவர். அண்ணா நகருக்கும் ஆர்.கே.நகருக்கும் ஏணி வச்சாலும் எட்டாதே என்று பதிலுக்கு பல்லவி பாடிவிட்டனராம்.
மக்கள் கோபம் தணியுமா
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது சைதை துரைசாமியை தொகுதிக்குள் விடக்கூடாது என்பதற்காக, வெற்றிவேல் குரூப் மற்றும் சைதைக்கு வேண்டாத குரூப்பினர் மாஸ்டர் பிளான்களை போட்டுவருவதாக சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோஷ்டி பூசலால், ஆர்.கே.நகர் தொகுதி கவனிக்கப்படாமல் இருந்துள்ளதை அதிமுக தலைமை உணர்ந்து கொண்டு, மக்களின் கோபத்தை தணிக்க இனிமேல் நன்கு 'கவனிக்கும்' என்பதே தொகுதி பேச்சாக உள்ளது.