அதிமுக வேட்பாளர்கள் மீது புகார் மழை.. இன்னும் பல தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் மாறலாம்
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் பலர் மீது எதிர் கோஷ்டியினர் நீண்ட குற்ற பத்திரிகையை தயாரித்து கட்சி தலைமைக்கு அனுப்பி வருவதால், ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இன்னும் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடவும், எஞ்சிய 7 தொகுதிகளில் தோழமை கட்சியினரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட செய்யவும் தீர்மானித்து சில தினங்கள் முன்பு ஜெயலலிதா பட்டியலை வெளியிட்டார். அதில் பல்வேறு புகாருக்கு உள்ளானவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதை பார்த்ததும், கட்சியினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை மாற்றக் கோரி, கட்சி தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர். கட்சியினரிடம் இருந்து வேட்பாளர்கள் மீது குவியும் புகார் மனுக்கள், கட்சி தலைமையையும், கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கட்சியினர் வேண்டுகோளை ஏற்று, பல வேட்பாளர்களை, கட்சி தலைமை மாற்றி உள்ளது. எனவே ஊக்கமடைந்த எதிர்கோஷ்டியியனர், புகார் கடிதங்களை ஷிப்ட் போட்டு எழுதி, கார்டனுக்கு அனுப்பிக்கொண்டே உள்ளனர்.
சேலம்,ஏழாவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் கே.ஆர்.எஸ். சரவணன். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கவுன்சிலராகவே அவர் மக்கள் பணி ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, தொகுதியில் எதிரொலிக்கிறது.
இவருக்கு, திமுகவினர் நடத்தி வரும், உள்ளூர் சேனலில் தொடர்பு உள்ளதும், உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல திருச்சி கிழக்கு தொகுதி மனோகரன், சங்கரன் கோயில் ராஜலட்சுமி, காஞ்சிபுரம் மைதிலி திருநாவுக்கரசு, ஆற்காடு, கே.வி.ராமதாஸ், மதுரை கிழக்கு தக்கார் பாண்டி, காட்பாடி அப்பு, பேராவூரணி கோவிந்தராஜன், துறைமுகம் சீனிவாசன், கம்பம் ஜக்லைன், சோளிங்கர் பார்த்தீபன், மாதவரம் தட்சணாமூர்த்தி, லால்குடி விஜயமூர்த்தி, வீரபாண்டி மனோன்மணி, அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலர் மீது புகார் மனுக்குள் ஜெயலலிதாவின் கவனத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.
துறைமுகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏவாகும். இவர் அதிமுக தலைமைக்கு எதிராக மாறியுள்ள சேகர்பாபுவிடம் உதவியாளராக இருந்ததாகவும், 2006-11 கால கட்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தபோது, தொகுதியில் வசிக்கும் வட மாநில கட்டிட உரிமையாளர்களை மிரட்டி பணம் பெற்றதாகவும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மொத்த வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டி ஜெயலலிதாவுக்கு புகார் கடிதங்கள் பறந்துள்ளன.
எனவே வேட்பாளர் மாற்றப்படலம் தொடரும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.