ஜெயலலிதா இல்லாத அதிமுக தொடக்கநாள் விழா... அக்.17ல் கொண்டாட்டம்
அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது.
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வரும் 17ஆம் தேதி அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கும், ஜெயலலிதாவின் படத்திற்கும் மரியாதை செலுத்தப்படும் என, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அதிமுக தொடக்க நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விழா மலரை வெளியிடுவார்.

கடந்த ஆண்டு ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அதிமுக தொடக்க நாள் விழா அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்து விட்டார்.
இந்த ஆண்டு பிளவுபட்டிருந்த அதிமுக அணிகள் ஒருங்கிணைந்து அதிமுக தொடக்க நாளை கொண்டாடுகின்றன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், வரும் 17ஆம் தேதி அதிமுக தொடங்கி 45ஆண்டுகள் நிறைவடைந்து, 46ம் ஆண்டு தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 20-ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்கள், மாநகராட்சி, நகரங்கள் மற்றும் பிற மாநிலங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications