தேர்தலுக்குப் பின் பாஜக அணிக்கு அதிமுக ஆதரவு.. துணை பிரதமர் பதவிக்கு குறி?
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து திடீரென இடதுசாரிகளை கழற்றிவிட்டிருக்கும் அதிமுக, பாஜகவுடன் தேர்தலுக்குப் பின் கூட்டணி வைக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் கடந்த ஒரு மாத காலமாக இடதுசாரிகள் இருந்து வந்தனர். அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குமே தலா ஒரு தொகுதிதான் என்று அதிமுக தெரிவிக்க ஆடிப் போயினர் இடதுசாரிகள். பின்னர் நேற்று முன்தினம் 'உங்களோடு கூட்டணியே' இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் அதிமுகவினர் தெரிவித்துவிட்டனர்.
முடிவுக்கு வந்த இடதுசாரி உறவுகள்
இதைத் தொடர்ந்து அதிமுக- இடதுசாரிகள் உறவு முடிவுக்கு வந்தது. இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீட்டில்தான் ஏற்பட்ட சிக்கல்தான் இந்த முறிவுக்கு காரணம் என்றாலும் அதிமுக ப்ளான் பி ஒன்றை வைத்துக் கொண்டுதான் இம்முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
அதிமுக- பாஜக அணி
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே பாரதிய ஜனதா கட்சி விரும்பியது. ஆனால் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதாவோ, ராஜ்யசபா தேர்தல் தொடங்கி இடதுசாரிகளுடனேயே நெருக்கம் காட்டி வந்தார். பின்னர் லோக்சபா தேர்தலுக்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் கூட்டணி என்றும் அறிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லாதது ஏன்?
இதனால் அதிமுக- பாஜக கூட்டணி இல்லை என்பது உறுதியானது. அதிமுகவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாதான் பிரதமர் வேட்பாளர்.. அதேபோல் பாஜகவில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர்..இரு கட்சிகளுமே பிரதமர் வேட்பாளர்களை வைத்துக் கொண்டு தேர்தல் களத்தை சந்திக்க முடியாது என்ற நிலையில்தான் அதிமுக- பாஜக கூட்டணி உருவாகவில்லை என்றும் கூறப்பட்டது.
இறங்கி வந்த அதிமுக
தற்போது லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொண்டு பேசிவரும் ஜெயலலிதா தமது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மெல்ல இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. "மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால்தான் தமிழக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பேசி வருகிறார். அத்துடன் அதிமுகதான் அடுத்த ஆட்சி அமையும் என்றோ தாம் அடுத்த பிரதமர் என்றோ குறிப்பிடுவதில்லை.
மோடி, பாஜகவை விமர்சிக்காத ஜெ.
அத்துடன் காங்கிரஸ் மற்றும் திமுகவை மட்டுமே விமர்சித்தும் வருகிறார் ஜெயலலிதா. பாரதிய ஜனதா கட்சியைப் பற்றியோ அதன் கடந்த கால ஆட்சிகளைப் பற்றியோ அல்லது பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பற்றியோ எந்த ஒரு துளி விமர்சனத்தையும் ஜெயலலிதா முன்வைப்பதும் இல்லை.
மோடியை விமர்சிக்க காத்திருக்கும் இடதுகள்
அத்துடன் இடதுசாரிகள் அதிமுக அணியில் இருந்தால் நிச்சயமாக அவர்கள் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்வார்கள்.. அதனால் பாஜகவுடனான நட்புறவு பாதிக்கப்படும் என்று கணக்குப் போட்டுதான் இடதுசாரிகளை கழற்றிவிட்டிருக்கிறார் ஜெயலலிதா.
தேர்தலுக்குப் பின் பாஜக அணி?
இவை அனைத்தையும் சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள், லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாஜக அணியை ஜெயலலிதா ஆதரிக்க முடிவு செய்துவிட்டார். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் நிலையில் அதிமுகவும் கணிசமான தொகுதிகளைப் பெற்றால் துணை பிரதமர் பதவியை அல்லது முக்கிய துறைகளை வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் ஜெயலலிதாவின் திட்டம் என்கிறார்கள். இதனாலேயே இடதுசாரிகளை இப்போதே கழற்றிவிட்டு மூன்றாவது அணியில் இருந்து விலகியும் கொண்டது அதிமுக என்கின்றனர்.
இன்னும் எத்தனை எத்தனை காட்சிகள் மாறுமோ?