நிர்மலா பெரியசாமி- வளர்மதி மோதல்... அதிமுக கூட்டத்தில் நடந்தது இதுதான்!
பா.வளர்மதி-நிர்மலா பெரியசாமி நடுவேயான வாக்குவாதத்திற்கு பிறகும் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
சென்னை: நட்சத்திர பேச்சாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் தர வேண்டும் என நடிகர் செந்தில் கேட்டுக்கொண்டார்.
கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள இந்த நேரத்தில், தங்கள் கோரிக்கைகளை முடிந்த அளவுக்கு நிறைவேற்றிக்கொள்ள நட்சத்திர பேச்சாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பங்கேற்று பேசினார்.
அப்போது பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசிய நிர்மலாவுக்கும், பா.வளர்மதிக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மோதல்
சசிகலா தரப்புக்கு எதிராக திரும்பியுள்ள பன்னீர்செல்வம் குறித்து நிர்மலா பெரியசாமி புகழ்ந்து பேசியதால் சசிகலா ஆதரவாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பிறகும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அசராமல் தொடர்ந்து கூட்டத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் ஒவ்வொருவராக கருத்துகளை கூறினார்கள்.
நடிகர் செந்தில்
திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காத செந்தில் நீண்டகாலமாக அதிமுக பேச்சாளராக வலம் வருகிறார். அவர் பேசும்போது, தற்போது எங்களை போன்றோருக்கு பொதுக்கூட்டம் மட்டும்தான் பிழைப்பாக இருக்கிறது. எனவே மாதம் ரூ.2 லட்சம் சம்பளமாக வழங்க வேண்டும். அமைச்சர்கள் எங்களை மதிப்பதில்லை, உதவி கேட்டால், எங்களுக்கு ஒன்றும் செய்தும் தருவதில்லை. இதுபோன்ற நிலையை மாற்ற வேண்டும் என கூறினார்.
அனிதா குப்புசாமி
நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசும்போது, நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டங்களுக்கு வரும்போது உரிய மரியாதை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாடகியும், அதிமுக பேச்சாளருமான அனிதா குப்புசாமி பேசும்போது, எங்களுக்கு இன்னும் அதிக எண்ணிக்கையில் கூட்டங்களில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.
சிங்கமுத்து கோரிக்கை
நடிகர் சிங்கமுத்து பேசுகையில், எங்களை எந்த பகுதியில் அதிகம் பயன்படுத்த முடியுமோ அந்த இடத்தில் பேச வாய்ப்பு அளியுங்கள் என்றார். மேலும், கட்சிக்கு சோதனைக்காலம் வந்தபோதும் தொடர்ந்து கட்சியில் இருப்பவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று, இப்போது அவர் சசிகலா அணியில் இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசினார்.
டிடிவி தினகரன் கவனத்திற்கு..
நட்சத்திர பேச்சாளர்கள் பேசி முடித்த பிறகு, அந்த கருத்துகள் அனைத்தும் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறினார்.