வேறு ரூட்டில், எச்.ராஜாவிற்கு ஸ்கெட்ச் போடுகிறதா அதிமுக?
Recommended Video
சென்னை: சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து, தமிழ்ச் சமூகத்தில் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜாவுக்கு கட்டம் கட்டும் பணிகளில் அதிமுக ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து சமூகத்தினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் அஜெண்டாவுடன் எச்.ராஜா செயல்பட்டு வருவதை போல தோன்றுகிறது.
உலகமே பாராட்டிய ஜல்லிக்கட்டு அமைதி புரட்சியின் போது கூட, அதில் பங்கேற்ற இந்து மதத்தினரை இஸ்லாமிய மதத்தினர் தாக்கி விட்டதாகக் கூறி ட்விட்டரில் வதந்திகளை கிளப்பி விட்டு பார்த்தார் ராஜா. ஆனால் இதற்கெல்லாம் தமிழக இளைஞர்கள் மசியக் கூடியவர்கள், கிடையாது என்பதால், அவரது அவரது வட மாநில பிரிவினைவாத தந்திர முயற்சிகள் பலிக்கவில்லை.
இழிவான பேச்சு
இந்த நிலையில்தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திருமயம் நகர காவல் துறையினருடன் எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து மிக மோசமான வார்த்தைகளைப் பேசினார் ராஜா. இந்த விஷயத்திற்கு பிறகு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பினர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜா, இந்து சமய அறநிலையத் துறையினரை கடுமையாக சாடினார். அவர்கள் வீட்டுப் பெண்களை இழிவாகப் பேசினார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து, கோயில்களை அரங்காவல் குழுவிற்கு மாற்றிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் ராஜா. இந்த கோபத்தைதான் இப்படி தரம் கெட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்தி உள்ளார்.
நேரடி போர்
போலீசார் குறித்த இவரது பேச்சு, அறநிலையத் துறை ஊழியர்கள் குறித்த ராஜாவின் பேச்சு போன்றவை மாநில அரசு ஊழியர்களுக்கு எதிரான நேரடிப் போர் என்று பார்க்கப்படுகிறது. தங்கள் துறையையும், கோர்ட்டையும் விமர்சனம் செய்த ராஜா மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தும் கூட அரசு அவரை பாதுகாப்பதாக காவல்துறையில் சிலர் நினைக்கிறார்கள். அறநிலையத் துறை ஊழியர்களும் கூட ராஜா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். ஈரோட்டில் நேற்று அவர்கள் அறநிலையத் துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். வரும் 27ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
ஆபத்தை உணர்ந்த அதிமுக
ராஜாவின் பேச்சால் காவல்துறை, இந்து சமய அறநிலையத் துறை ஆகிய மாநில அரசின் துறை ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், இந்தப் போக்கை இப்படியே அனுமதிப்பது அரசுக்கு தான் ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டது அதிமுக. அதன் வெளிப்பாடாக எச்.ராஜாவிற்கு ஸ்கெட்ச் போடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலூர் அதிமுக எம்பி அருண்மொழித்தேவன் இன்று அளித்த, கடுமையான சொற்களுடன் கூடிய பேட்டி இதை உறுதி செய்கிறது. ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவரை போலவே செயல்படுகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியவர். பிறரை ஒருமையில் பேசுவது ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் அருண்மொழித்தேவன்.
நெருக்கடிகள்
மற்றொரு பக்கம் இந்து சமய அறநிலையத் துறையினர் 27 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க அரசு அனுமதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரு தளங்களில் இருந்தும் ராஜா அதிமுகவால் சுற்றிவளைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான பிரச்சினையில் ராஜா மீது நடவடிக்கை எடுத்தால் அது குறிப்பிட்ட அளவுக்கான மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தும், அது ராஜாவிற்கு சாதகமாக மாறும் என்று நினைத்த அரசு, இப்போது வேறு வகையில் ராஜாவை கட்டம் கட்ட ஆரம்பித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் ராஜாவுக்கு எதிராக அதிமுக எப்படி காய் நகர்த்த போகிறது என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கிக்கொண்டு உள்ளனர்.